திகார் சிறையில் கைதிகளிடையே கோஷ்டி மோதல்: 2 பேர் பலி, 12 பேர் காயம்
டெல்லி: டெல்லியில் உள்ள திகார் சிறையில் இரண்டு பிரிவு கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 2 கைதிகள் பலியாகியுள்ளனர், 12 பேர் காயம் அடைந்துள்ளனர்.
டெல்லியில் உள்ள திகார் சிறையில் பாதுகாப்பு அதிகம் உள்ள வார்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் ஈஷ்வர், விஜய் மற்றும் ஷதாப். புதன்கிழமை மதியம் சிறையில் உள்ள மருத்துவமனையில் அவர்களுக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

அதன் பிறகு போலீசார் அவர்களை அவர்களின் வார்டுக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தனர். அப்போது வேறு ஒரு கும்பலைச் சேர்ந்த அனில், வாசு மற்றும் சந்தீப் ஆகியோர் ஈஷ்வர், விஜய் மற்றும் ஷதாபை தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களால் தாக்கினர்.
இரு பிரிவினருக்கு இடையே நடந்த இந்த மோதலில் 20களில் இருந்த ஈஷ்வர் மற்றும் அனில் ஆகியோர் பலியாகியுள்ளனர். இந்த இரண்டு பிரிவினர் மோதிக் கொண்டபோது சிறை எண் 1, 2 மற்றும் 4 ஆகியவற்றில் இருந்த கைதிகளும் அதில் கலந்து கொண்டனர்.
இந்த மோதலில் 12 விசாரணை கைதிகள் மற்றும் பாதுகாவலர்கள் காயம் அடைந்துள்ளனர். மோதலை தடுக்கச் சென்ற கைதிகளும் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் தீனதயாள் உபத்யாய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் திகார் சிறையில் 4 கைதிகள் சேர்ந்து ஒரு விசாரணை கைதியை கொலை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புழல் சிறையில் மோதல்:
கடந்த மாதம் 25ம் தேதி சென்னை புழல் சிறையில் கைதிகளின் அறைகளை சிறை காவலர்கள் சோதனையிட்டனர். அப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில கைதிகள் காவலர்களை தாக்கினர். கைதிகள், காவலர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஜெயிலர் உள்பட 4 காவலர்கள் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications