திருப்பதியில் 2 கிலோ ‘தலை முடி’ திருட்டு!
திருப்பதி: திருப்பதியில் பக்தர்கள் காணிக்கையாக அளித்த 2 கிலோ தலைமுடி திருட்டு போயுள்ளது.
திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் தங்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்துவது வழக்கம். தினமும் சுமார் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பக்தர்கள் வரை தலைமுடியை காணிக்கையாக அளித்து வருகின்றனர்.
இவ்வாறு காணிக்கையாகப் பெறப்படும் முடியானது ஆன்லைன் மூலம் ஏலம் விடப்படுகின்றன. இதன் மூலம் கோடிக்கணக்கில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு வருமானம் கிடைக்கிறது.
இந்நிலையில், நேற்று திருமலையில் உள்ள சப்தகிரி முடி காணிக்கை செலுத்தும் இடத்தில் 2 கிலோ தலைமுடி திருடு போனது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக இது தொடர்பாக தேவஸ்தான அதிகாரிகளுக்கும், விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில், சம்பந்தப்பட்ட தலைமுடி காணிக்கை செலுத்தும் இடத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.