சந்திரகாச்சி ரயில் நிலையத்தில் சோகம்.. கூட்ட நெரிசலில் சிக்கி 2 பயணிகள் பலி, 14 பேர் காயம்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் சந்திரகாச்சி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் பலியாகினர், 14 பேர் காயமடைந்தனர்.
இன்று மாலை 6.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்ததாக தென் கிழக்கு ரயில்வே செய்தித்தொடர்பாளர் சஞ்சய் கோஷ் தெரிவித்தார். நாகர்கோவில்-ஷாலிமார் எக்ஸ்பிரஸ் மற்றும் 2 மின்சார ரயில்கள் ஒரே நேரத்தில் சந்திரகாச்சி ரயில் நிலையத்திற்கு வந்ததாகவும், அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக, நடை மேம்பாலத்தில் இந்த துரதிருஷ்டவசமான சம்பவம் நடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்திரகாச்சி என்பது கொல்கத்தாவின் புகழ்பெற்ற ஹவுரா ரயில் நிலையத்திலிருந்து சுமார் 10 கி.மீ தூரத்திலுள்ள ரயில் நிலையமாகும்.

சம்பவத்தில் காயமடைந்தோர் ஹவுரா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications