டெல்லி போராட்டத்தில் விவசாயிகளுக்கு வயிற்றுப் போக்கு… 2 பேர் மருத்துவமனையில் அனுமதி
டெல்லியில் 26 நாட்களாக போராடி வரும் விவசாயிகளில் 2 பேருக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி: தேசிய வங்கிகளில் பெறப்பட்ட பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் போராடி வருகின்றனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் 26 நாட்களாக பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பல்வேறு வகையில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் விவசாயிகளின் பிரதான கோரிக்கைகளாக உள்ளன.

நூதனப் போராட்டம்
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான போராட்டத்தை கையிலெடுத்து தங்களது பாதிப்பையும் கோரிக்கையையும் மத்திய அரசுக்கு தெரிவித்து 26வது நாளாக இன்றும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் மத்திய அரசு எந்த பதிலையும் இன்னும் அளிக்கவில்லை.

துன்புறுத்திக் கொண்டு…
இந்நிலையில், விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இன்றும் தலையில் மொட்டை அடித்துக் கொண்டு கடும் வெயிலில் அமர்ந்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனால் அவர்களின் உடல் நிலை மோசமடைந்து வருகிறது.

வயிற்றுப்போக்கு
இந்நிலையில் அகிலன் மற்றும் பெருமாள் ஆகிய இரண்டு விவசாயிகள் கடும் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அச்சமடைந்த மற்ற விவசாயிகள் அவர்கள் இருவரையும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உறுதி
இதுகுறித்து யாருக்கு என்ன ஆனாலும், பயிர்கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்யாமல் இங்கிருந்து அகலப் போவதில்லை என்று விவசாயிகள் கூறினார்கள். மற்ற விவசாயிகள் மொட்டை அடித்துக் கொண்டு உற்சாகத்தோடு போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications