பீகாரில் பாஜகவிற்கு காங்கிரஸ் அதிர்ச்சி வைத்தியம்.. உருவானது மிகப்பெரிய கூட்டணி!
பீகாரில் காங்கிரஸ் தலைமையில் மிகப்பெரிய கூட்டணி உருவாகி உள்ளது.
Recommended Video
பாட்னா: பீகாரில் காங்கிரஸ் தலைமையில் மிகப்பெரிய கூட்டணி உருவாகி உள்ளது. லோக் சபா தேர்தலில் போட்டியிடும் வகையில் இந்த கூட்டணி உருவாக்கப்பட்டு உள்ளது.
2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக இப்போதே கட்சிகள் தயாராகி வருகிறது. இன்னும் முழுதாக 5 மாதங்கள் தேர்தலுக்கு இருக்கும் நிலையில், இப்போதே கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது.
இந்த முறை பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கும் திட்டத்தில் உள்ளது. அதன் ஒரு கட்டமாக தற்போது பீகாரில் மிகப்பெரிய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.
பீகார் என்ன
பீகாரில் மொத்தம் 40 லோக் சபா இடங்கள் உள்ளது. உத்தர பிரதேசம் போலவே பாஜக இங்கு அதிக தொகுதிகளை வெல்வதில் குறியாக உள்ளது. இங்கு அதிக இடங்களை வெல்லும்பட்சத்தில், மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வரலாம். சென்ற முறை 2014ல் நடந்த தேர்தலில் பாஜக அங்கு 40க்கு 31 இடங்களை வென்று சாதனை படைத்தது.
பெரிய குறி
ஆனால் இந்த முறை பாஜக அத்தனை இடங்கள் வெல்ல முடியாது என்றுதான் கூறுகிறார்கள். அதேபோல் காங்கிரஸ் கட்சியும் நிறைய இடங்களை பெறாது என்கிறார்கள். மாறாக அங்கு இருக்கும் மாநில கட்சிகள் இந்த முறை விஸ்வரூபம் எடுக்கும் என்று கருத்துக் கணிப்பாளர்கள் கூறுகிறார்கள். ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய லோக் சமதா பார்ட்டி ஆகிய கட்சிகள் இந்த தேர்தலில் பெரிய அளவில் சாதிக்கும் என்று கூறுகிறார்கள்.
பாஜகவைவிட்டு விலகியது
இந்த நிலையில்தான் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்று இருந்த ராஷ்டிரிய லோக் சமதா பார்ட்டி அந்த கூட்டணியில் இருந்து விளைகிறது. பாஜகவின் நல்ல நண்பனாக இருந்தது ஆர்எல்எஸ்பி (ராஷ்டிரிய லோக் சமதா பார்ட்டி). கூட்டணியில் ஏற்பட்ட பிளவை அடுத்து அந்த கட்சியின் தலைவர் உபேந்திர குஷ்வாஹா மத்திய இணையமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.
இவர் ஏன் முக்கியம்
பீகாரில் ஆர்எல்எஸ்பி மிக முக்கியமான கட்சியாகும். ஆர்எல்எஸ்பி பீகாரில் உள்ள குஷ்வஹா ஜாதியினருக்கான கட்சியாகும். குஷ்வஹா என்பது பீகாரில் மிகப்பெரிய சாதி. அங்கு குஷ்வஹா ஜாதியினர்தான் அதிகம் இருக்கிறார்கள். இவர்கள் வாக்களிக்கும் நபர்களே அங்கு வெற்றிபெற முடியும். இந்த கட்சிதான் பாஜகவின் கூட்டணியில் இருந்து விலகி உள்ளது.
பெரிய கூட்டணி
தற்போது இந்த ஆர்எல்எஸ்பி கட்சி காங்கிரஸ் கட்சியின் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இணைந்து இருக்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் பீகாரில் தற்போது காங்கிரஸ், ஆர்எல்எஸ்பி, ராஷ்டிரிய ஜனதா தளம், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா ஆகிய கட்சிகள் உள்ளது. இன்னும் சில சிறிய கட்சிகளும் இந்த கூட்டணியில் உள்ளது. இதன் மூலம் பீகாரில் பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கி உள்ளது.
ஏன் இது பெரியது
சென்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஒவ்வொரு இடங்களிலும் ஆர்எல்எஸ்பி கட்சி 20-30 சதவிகித வாக்குகளை பெற்றது. அதேபோல் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 20 சதவிகித வாக்குகள் வரை பெற்றது. இந்த இரண்டு பெரிய கட்சிகளும் காங்கிரசில் இடம்பெற்று இருப்பதால், பீகாரில் காங்கிரஸ் கூட்டணி பெரிய கூட்டணியாக உருவெடுத்து உள்ளது.
அடுத்து என்ன
பாஜக கூட்டணியில் உள்ள இன்னும் சில கூட்டணி கட்சிகளையும் காங்கிரஸ் தனது பக்கம் இழுக்க முயற்சித்து வருகிறது. லோக் சபா தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையின் போது, பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியைவிட்டு சில கட்சிகள் வெளியேற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.