கடற்படையில் 3 ஆண்டுகளில் 21 விபத்துகள்: என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?- பாரிக்கர் விளக்கம்
பெங்களூர்: கடந்த 3 ஆண்டுகளில் கடற்படையில் நடந்த விபத்துகள் குறித்து நடத்தப்பட்டு வரும் விசாரணகளின் நிலை பற்றி மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கடந்த ஜனவரி மாதம் வரை இந்திய கடற்படை கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் ஆகியவை 21 முறை விபத்துக்குள்ளாகியுள்ளன என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு நடைமுறைகள், பரிசோதனைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது என்று ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்த விளக்கத்தில் பாரிக்கர் குறிப்பிட்டுள்ளார். நீர்மூழ்கி கப்பலை கட்டும் திட்டத்திற்கு அரசு ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளில் நடந்த கடற்படை விபத்துகளின் விசாரணை நிலவரம் வருமாறு,
1. 11.03.2012: கப்பல் எல்சியு எல் 38ல் தீ விபத்து ஏற்பட்டது. இதற்கு காரணமான ஒரு அதிகாரி, 2 மாலுமிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
2. 08.10.2012: இன்பாக் 83 கப்பலின் என்ஜின் அறையில் தீப்பிடித்தது. அந்த விபத்துக்கு காரணம் என்று யார் மீதும் குறைகூறப்படவில்லை.
3. 19.12.2012: ஐஎன்எஸ் சங்குஷின் ஏஎப்டி பேட்டரி பிட்டில் தீப்பிடித்தது. இந்த சம்பவத்திற்கு யாரும் காரணம் இல்லை. இது விபத்து தான் என்று கருதப்பட்டது.
4. 14.07.2013: ஐஎன்எஸ் தெரஸாவில் தீப்பிடித்தது. அதற்கு காரணமான 3 அதிகாரிகள், 4 மாலுமிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
5. 26.07.2013: ஐஎன்எஸ் டெல்லியின் சில பாகங்களில் சேதம் ஏற்பட்டது. இதற்கு காரணமான 2 அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
6. 14.08.2013: ஐஎன்எஸ் சிந்துரக்ஷக்கில் வெடிப்பு சம்பவம் நடந்தது. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
7. 22.09.2013: ஐஎன்எஸ் விராட்டில் தீ. இதற்கு காரணமான 5 அதிகாரிகள் மற்றும் 1 மாலுமி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
8. 04.12.2013: ஐஎன்எஸ் கொங்கனில் தீ. இதற்கு காரணமான 4 அதிகாரிகள் மற்றும் 2 மாலுமிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டது.
9. 19.12.2013: ஐஎன்எஸ் தர்காஷில் சேதம் ஏற்பட காரணமான 2 அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
10. 23.12.2013: ஐஎன்எஸ் தல்வார் மீன்பிடி படகு மீது மோதியது. இதற்கு காரணமான 4 அதிகாரிகள், 2 மாலுமிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. அதில் 3 அதிகாரிகள் மற்றும் 2 மாலுமிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மீதமுள்ள ஒரு அதிகாரி மீதான விசாரணை நடந்து வருகிறது.
11. 08.01.2014: ஐஎன்எஸ் பெட்வாவின் சோனார் டோமில் விரிசல் ஏற்பட்டது. இதற்கு காரணமான 3 அதிகாரிகளில் இருவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
12. 17.01.2014: ஐஎன்எஸ் சிந்துகோஷில் பிரச்சனை ஏற்பட்டது. இதற்கு காரணமான அதிகாரி ஒருவர் மீது ஒழுங்கு நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டது.
13. 23.01.2014: ஐஎன்எஸ் விபுல் கப்பலில் ஏற்பட்ட விரிசல் காரணமாக கடல் நீர் புகுந்தது. இதற்கு காரணமான 5 அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டது.
14. 30.01.2014: துறைமுகத்திற்குள் நுழையும்போது ஐஎன்எஸ் ஐராவத்தின் ப்ரொபெல்லரில் சேதம் ஏற்பட்டது. இதற்கு காரணமான 2 அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டது.
15. 26.02.2014: ஐஎன்எஸ் சிந்துரத்னாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 அதிகாரிகள் பலியாகினர். இதற்கு காரணமான 7 அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டது.
16. 07.03.2014: கட்டப்பட்டுக் கொண்டிருந்த கப்பலின் என்ஜின் அறையில் சோதனை நடத்தியபோது விபத்து ஏற்பட்டது. இதற்கு யாரும் காரணம் இல்லை என்று கூறப்பட்டுவிட்டது.
17. 06.04.2014: ஐஎன்எஸ் மாதங்காவில் புகை ஏற்பட்டது. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
18. 28.06.2014: ஐஎன்எஸ் குத்தாரின் ப்ரொபெல்லரில் சேதம் ஏற்பட்டது. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
19. 02.07.2014: கொச்சி துறைமுகத்திற்குள் நுழையும்போது ஐஎன்எஸ் சீத்தா தரைதட்டியது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
20. 31.10.2014: கடலில் ஐஎன்எஸ் கோரா எம்வி மாடலின் ரிக்மர்ஸுடன் மோதியது. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
21. 06.11.2014: டிஆர்வி- 72 மூழ்கியது. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ஐஎன்எஸ் சிந்துகோஷ் நீர்மூழ்கி கப்பல் மீது கடந்த 19ம் தேதி மீன்பிடி படகு மோதியதில் சேதம் ஏற்பட்டது. இதையடுத்து கப்பல் மும்பையில் உள்ள கடற்படை பட்டறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு கப்பல் பழுதுபார்க்கப்பட உள்ளது.