செல்போனை உடைத்ததற்காக 90 வயது பாட்டியை கட்டையால் அடித்துக் கொன்ற பேரன்
பெங்களூர்: பெங்களூரில் தனது செல்போனை உடைத்த 90 வயது பாட்டியை வாலிபர் ஒருவர் கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளார்.
பெங்களூர் பனசங்கரி பகுதியில் உள்ள கதிரெனஹள்ளியை சேர்ந்தவர் லக்ஷ்மம்மா(90). திங்கட்கிழமை இரவு அவரின் பேரன் சிவ்ராஜ்(22) ஹாலில் தனது செல்போனை சார்ஜ் போட்டுள்ளார். கண் பார்வை சரியாகத் தெரியாத லக்ஷ்மம்மா ஹாலில் நடந்து செல்கையில் தெரியாமல் கை பட்டு சிவ்ராஜின் செல்போன் கீழே விழுந்தது.
ஏதோ விழும் சப்தம் கேட்டு ஹாலுக்கு ஓடி வந்த சிவ்ராஜ் தனது செல்போனை எடுத்து பார்த்தபோது அதன் ஸ்கிரீன் கண்ணாடி நொறுங்கிக் கிடந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த சிவ்ராஜ் உருட்டுக் கட்டையை எடுத்து வந்து பாட்டியின் கழுத்தில் ஓங்கி ஒரு போடு போட்டார்.
இதில் நிலைகுலைந்து கீழே விழுந்தார் லக்ஷ்மம்மா. உடனே குடும்பத்தார் ஓடி வந்து பாட்டியை தூக்கிச் சென்று படுக்கையறையில் படுக்க வைத்தனர். மேலும் கண்மூடித்தனமாக தாக்கிய சிவ்ராஜை கண்டித்தனர்.
காலையில் பாட்டி எழுந்திரிக்கவில்லை. உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிவ்ராஜை கைது செய்தனர்.