சிக்கிம் மாநிலத்தை புரட்டி எடுத்த கனமழை.. மாயமான 23 ராணுவ வீரர்கள்! உதவிகளை வழங்குவதாக பிரதமர் உறுதி
கேங்டாக்: வடக்கு சிக்கிமில் திடீரென ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இது லாச்சென் பள்ளத்தாக்கில் உள்ள ராணுவ முகாமை கடுமையாக தாக்கியுள்ளது. இந்நிலையில், 23 ராணுவ வீரர்கள் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநிலத்திற்கு தேவையான உதவிகளை செய்வதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக டீஸ்டா ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆற்றையொட்டியுள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இது குறித்து முதலமைச்சர் பிரேம் சிங் தமாங் கூறுகையில்,

"இந்த வெள்ளத்தில் இதுவரை யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் சிலரை காணவில்லை என்று புகார்கள் வந்திருக்கின்றன. அதேபோல பொதுச்சொத்துக்கள் பலத்த சேதத்தை எதிர்க்கொண்டிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன" என்று கூறியுள்ளார்.
வெள்ளம் குறித்து மாநில பேரிடர் ஆணையம் கூறுகையில், "மாங்கன் மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் மேக வெடிப்பு காரணமாக வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் மழை பெய்திருக்கிறது. இதுவே டீஸ்டா நதிப் படுகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட காரணமாகும். எனவே இந்த நதியில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். சுங்தாங்கில் உள்ள ஏரி உடைந்ததால் தற்போது நதியின் நீர் மட்டம் தொடர்ந்து வருகிறது. எனவே கரையோரம் இருக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வெண்டும்" என்று அறிவுறுத்தியுள்ளது.
நேற்று முதல், தெற்கு சிக்கிமில் உள்ள நம்ச்சி மற்றும் நாம்தாங் ஆகிய இடங்களில் முறையே 98.0மிமீ மற்றும் 90.5மிமீ மழை பெய்துள்ளது. மேலும் 3-4 நாட்களுக்கு இந்த பகுதியில் மிதமான மழை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதேபோல இந்த திடீர் வெள்ளத்தில் சிக்கி 23 ராணுவ வீரர்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லாச்சென் பள்ளத்தாக்கில் உள்ள ராணுவ முகாமை வெள்ளம் தாக்கியதால் அங்கிருந்த ராணுவ வீரர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெள்ள பாதிப்புகள் குறித்து மாநில முதலமைச்சர் பிரேம் சிங் தமாங் உடன் பிரதமர் மோடி கலந்துரையாடியுள்ளார். அப்போது, வெள்ள பாதிப்பிலிருந்து மீள தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாகவும், அதேபோல பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications