கிர் காடுகளில் 5 ஆண்டுகளில் 238 சிங்கங்கள் பலி... குஜராத் அரசைக் குற்றம் சொல்கிறது காங்கிரஸ்!
காந்தி நகர்: குஜராத் அரசின் அலட்சியத்தால் கடந்த ஐந்து வருடங்களில் 238 சிங்கம் பலியாகியுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
நேற்று குஜராத் மாநில சட்டசபையில் வனத்துறை மானியக் கோரிக்கை மீது நடைபெற்ற விவாதத்தில் அம்மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. வான ஹர்ஷத் ரிபாடியா பேசினார்.
அப்போது அவர் குஜராத் மாநில வனத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் அம்மாநிலத்தின் கிர் காடுகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 238 சிங்கங்கள் பலியானதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது :-

சிங்கங்கள்...
கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் நடத்தப்பட்ட சென்சஸ் கணக்கெடுப்புக்கு பின் அரசு வெளியிட்ட தகவலின்படி கிர் காடுகளில் 411 சிங்கங்கள் உயிருடன் வாழ்வதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அங்கு வெறும் 173 சிங்கங்களே உயிர் வாழ்வதாக கூறப்பட்டுள்ளது.

அதிகாரிகளின் அலட்சியம்...
அப்படியென்றால் இந்த ஐந்து ஆண்டுகளில் 238 சிங்கங்கள் இறந்துள்ளது என்பது தானே இதற்கு அர்த்தம். இதற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம். அரசின் அலட்சியத்தால் இந்த 173 சிங்கங்களும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் இறந்துவிடும்' என ஆவேசமாகப் பேசினார்.

நிதி ஒதுக்கீடு...
மேலும், சமீபத்திய பட்ஜெட்டில் சிங்கங்களைப் பாதுகாப்பதற்கென ரூ 82.61 கோடி ஒதுக்கப்பட்டதை நினைவு கூர்ந்த ஹர்ஷத், இந்தக் கணக்கின் படி பார்த்தால் சிங்கமொன்றிற்கு தனிப்பட்ட முறையில் ரூ 47 லட்சம் செலவிடப் பட்டிருக்க வேண்டுமே, அவ்வாறு நடக்கிறாதா? எனக் கேள்வி எழுப்பினார்.

காளை உணவு....
அதேபோல், ‘காடுகளில் சிங்கத்திற்கு தேவையான நீல காளைகள் உணவாக கிடைக்காததால், அவை காடுகளை விட்டு வெளியேறி, அருகிலிருக்கும் கிராமங்களில் உள்ள மாடுகளை உணவாக்கிக் கொள்கின்றன. இதற்கு உடனடி நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்' என இவ்வாறு அவர் வலியுறுத்தினார்.

முழுப்பலான பதில்...
ஆனால், ஹர்ஷத்தின் குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும் விதமாக வனத்துறை வெளியிட்ட தகவல், பிரச்சினையை திசை திருப்புவதாக அமைந்திருந்தது.

புதிய குட்டிகள்...
அதாவது சிங்கங்களின் எண்ணிக்கையை பற்றி கூறாமல் எவ்வளவு சிங்கம் இறந்ததோ, அதற்கு இணையாக புதிய சிங்கக்குட்டிகள் பிறந்துள்ளன என அரசு பதிலளித்துள்ளது.

66 சிங்கங்கள் பலி...
இம்மாத தொடக்கத்தில் குஜராத் அரசு வெளியிட்ட தகவலின் படி கடந்தாண்டு மட்டும் 66 சிங்கங்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. அவற்றில், 55 சிங்கங்கள் இயற்கையான முறையிலும், 8 சிங்கங்கள் திறந்திருந்த கிணறுகளில் விழுந்து உயிரிழந்ததாகவும், 3 சிங்கங்கள் ரயில்களில் அடிபட்டு பலியானதாகவும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications