சூரத்தில் தந்தையில்லாத 251 பெண்களுக்கு மெகா திருமணம்
குஜராத் மாநிலம், சூரத்தில் தந்தையில்லாத 251 பெண்களுக்கு மெகா திருமணம் நடைபெற்றது.
சூரத்: குஜராத் மாநிலம், சூரத்தில் தந்தையில்லாத 251 பெண்களுக்கு மெகா திருமணம் நடைபெற்றது.
சூரத்தில் உள்ள சவானி மற்றும் மோவாலியா குடும்பத்தினர் தொழிலதிபர்களாவர். அவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக ஏழ்மை நிலையில் உள்ள பெண்களுக்கு திருமணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது 6-ஆவது ஆண்டான இந்த ஆண்டில் 251 தந்தையில்லாத பெண்களுக்கு மாபெரும் திருமணத்தை சவானி மற்றும் மேவாலியா குடும்பத்தினர் செய்து வைத்தனர்.
இந்த திருமணம் மோத்தா வர்சா நகரில் சவானி சைதன்யா வித்யா சங்கூல் என்ற இடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் 2012-ஆம் ஆண்டு வரை மாபெரும் திருமணங்கள் மூலம் சவானி குடும்பத்தினர் 824 பெண்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
மேலும் ஏழ்மை நிலையில் உள்ள 1,300 பெண்களுக்கு நிதியுதவியும் செய்தனர். 251 பெண்களில் 108 பேருக்கு மோவாலியா குடும்பத்தினர் தலா ரூ.5 லட்சம் செலவில் திருமணம் செய்தனர்.
அந்த 251 பேரில் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த மணப்பெண் ஒருவரும், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த 6 மணப்பெண்களும், ஒரு மாற்றுத்திறனாளியும் கலந்து கொண்டனர்.
இவர்களை தவிர்த்து மற்றவர்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களாவர். அவரவர் மதச்சடங்குகளின் படி இந்த திருமணங்கள் நடைபெற்றன.
சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், மதகுருமார்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அடுத்த இரு ஆண்டுகளுக்கும் இந்த நிகழ்ச்சிக்கான பட்டியலை தயார் செய்துவிட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறினர்.