மும்பை தாக்குதலுக்கு 6 மாதங்களுக்கு முன்னரே கொல்லப்பட்டவரும் 'குற்றவாளியா? அதிர வைத்த 'சாட்சி'
அடியாலா: மும்பை தாக்குதல் வழக்கின் குற்றவாளிகளில் ஒருவரான அப்துல்லா அந்த தாக்குதல் நடைபெறுவதற்கு 6 மாதத்துக்கு முன்னரே இறந்துவிட்டதாக பாகிஸ்தான் நீதிமன்றத்தில் அதிர்ச்சியளிக்கும் 'சாட்சியம்' அளித்துள்ளார் அவரது சகோதர் பலோல்கான்.
2008ஆம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி மும்பையில் மிகக் கொடூரமான பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 166 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இத் தாக்குதல் வழக்கு பாகிஸ்தானிலும் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் குற்றவாளிகள் ராவல்பிண்டியின் அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கேயே விசாரணையும் நடைபெற்று வருகிறது.
இவ்வழக்கின் குற்றவாளிகளில் ஒருவன் அப்துல்லா என்ற சதாம். அடியாலா சிறையில் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற விசாரணையின் போது அப்துல்லாவின் சகோதரர் பலோல்கான் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
அப்போது, மும்பை தாக்குதல் நடத்தப்படுவதற்கு 6 மாதங்களுக்கு முன்னரே அதாவது 2008ஆம் ஆண்டு மே 31-ந்தேதி வானா பகுதியில் நடந்த அமெரிக்க தாக்குதலில் சகோதரர் அப்துல்லா கொல்லப்பட்டு விட்டார் என அவர் கூறியிருக்கிறார். இந்த சாட்சியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அப்துல்லாதான் 2007ஆம் ஆண்டில் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ மீது நடத்தப்பட்ட கொலை முயற்சி மற்றும் 2008ஆம் ஆண்டு பாகிஸ்தானின் விமான படைக்கு சொந்தமான கம்ரா விமான தளத்தின் மீது நடந்த தாக்குதல் ஆகியவற்றில் தொடர்புடையவன் என்கிறது பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பு.
தற்போது அப்துல்லாவின் சகோதரரோ 2008ஆம் ஆண்டு மே மாதமே அவர் கொல்லப்பட்டுவிட்டதாக கூறியுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு விசாரணையை வரும் 23-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications