மும்பைத் தாக்குதலுக்குக் காரணமான சதிகாரர்கள் தண்டிக்கப்பட வேண்டும்- ஐ.நா.
மும்பை: மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி பயங்கர தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளின் சதிச் செயலுக்குக் காரணமான அத்தனை பேரும் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்று ஐ.நா. கூறியுள்ளது.
இன்று மும்பையில் பத்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் வெறியாட்டம் போட்டதன் நினைவு நாளாகும். இதையொட்டி இந்த சதிச் செயலுக்குக் காரணமான அத்தனை பேரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று ஐநா. வலியுறுத்தியுள்ளது.
இந்த கோரிக்கையை எச்சரிக்கை கலந்த செய்தியாக அது பாகிஸ்தானுக்கு தெரிவித்துள்ளது.

சதிகாரர்கள் தண்டிக்கப்பட வேண்டியது அவசியம்
இதுகுறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனின் செயலார் மார்ட்டின் நெசர்கி கூறுகையில், மும்பை பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் உள்ள அத்தனை சதிகாரர்களும் தண்டிக்கப்பட வேண்டியது அவசியமாகும். அவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட வேண்டும்.

கொடூரமான தாக்குதல்
மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் இரக்கற்றது, கொடூரமானது, கொடுமையானது, கடும் கண்டனத்துக்குரியது.

நடவடிக்கை அவசியம் தேவை
இந்த கொடும் செயலைத் திட்டமிட்டவர்களும், அதை அரங்கேற்றியவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கக் கூடாது. இதுதொடர்பான நடவடிக்கைகள் நடந்து வருவதாக நம்புகிறோம் என்றார் அவர்.

லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள்
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் மும்பைக்குள் கடல் மார்க்கமாக பத்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் புகுந்து வெறியாட்டத்தைத் தொடங்கினர். 3 நாட்கள் நீடித்த இந்த கொடூரத் தாக்குதலே உலகே அதிர்ந்து போய் பார்த்தது. இதில் வெளிநாட்டவர்கள் உள்பட 166 பேர் உயிரிழந்தனர்.

கசாப் மட்டும் சிக்கினான்
தாக்குதலில் ஈடுபட்ட 10 பேரில் 9 பேரை கமாண்டோப் படையினர் சுட்டுக் கொன்றனர். கசாப் மட்டும் பிடிபட்டான். அவனும் பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டு தண்டனையும் நிறைவேற்றப்பட்டு விட்டது.

சதிகாரர்கள் சுதந்திரமாக பாகிஸ்தானி்ல்
மும்பை சதிச் செயலுக்குத் திட்டம் தீட்டியவர்கள் இன்னும் தண்டிக்கப்படவில்லை. அவர்கள் சுதந்திரமாக பாகிஸ்தானில்தான் தொடர்ந்து நடமாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications