காதலன் கொடுமை: கடிதம் எழுதி வைத்துவிட்டு மாஜி மாடல் அழகி தூக்கு போட்டு தற்கொலை
மும்பை: மும்பையைச் சேர்ந்த முன்னாள் மாடல் அழகி தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது முடிவுக்கு காதலனே காரணம் என கடிதம் எழுதி வைத்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வெர்சோவா பகுதியில் உள்ள நியூ மஹதா காலனியில் 12வது மாடியில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசித்து வந்தவர் அர்ச்சனா பாண்டே(26). முன்னாள் மாடல் அழகியான அவர் நிதி ஆலோசகராக பணிபுரிந்து வந்தார். அவர் தனது படுக்கையறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாண்டே நடமாட்டத்தை காணவில்லை என்று திங்கிட்கிழமை பக்கத்துவீட்டுக்காரர் அழைப்பு மணியை அடித்தும் அவர் கதவை திறக்கவில்லை. மேலும் வீட்டில் இருந்து ஏதோ அழுகிய வாடை வந்துள்ளது. இதையடுத்து பக்கத்து வீட்டுக்ககாரர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கதவை உடைத்து பார்த்த போது அர்ச்சனா அழுகிய நிலையில் தூக்கில் பிணமாகத் தொங்கினார்.
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கூப்பர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வீட்டை சோதனை செய்ததில் அர்ச்சனா எழுதிய கடிதம் கிடைத்தது. அதில் அவர், தனது காதலன் உமர் பதானின் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்வதாக எழுதி வைத்திருந்தார். அதன் பிறகு போலீசார் பதானை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முன்னதாக படங்கள், தொலைக்காட்சி தொடர்களுக்கு நடிகர், நடிகைகளை அனுப்பி வைக்கும் ஏஜென்சி வைத்திருந்த மும்பை அந்தேரியைச் சேர்ந்த ஏக்தா பாபர்(35) என்பவர் மன அழுத்தத்தால் 16வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.