ஸ்பெக்ட்ரம் வழக்கு: குற்றம்சாட்டப்பட்டோரிடம் மார்ச் 3-ந் தேதி முதல் வாக்குமூலம் பதிவு
டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்பட 17 பேரிடம் சி.பி.ஐ. தனி நீதிமன்றத்தில் மார்ச் 3 ந்தேதி மூலம் வாக்குமூலம் பதிவு தொடங்குகிறது.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுத்திய புகார் குறித்து உச்சநீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. தொலைத்தொடர்புத்துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டு, டெல்லி சி.பி.ஐ. தனி நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் போலீஸ் தரப்பு சாட்சிகளான 153 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்வது கடந்த நவம்பர் 27 ந்தேதியுடன் முடிவடைந்தது. குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பதிவு, ஜனவரி 20ந்தேதி தொடங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், அதற்கான கேள்விப்பட்டியல் தயாராகவில்லை என்பதால் மேலும் அவகாசம் கோரப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட தனி நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி, குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்வது மார்ச் 3 ந்தேதி தொடங்கும் என்று அறிவித்தார்.
முதலில் பிப்ரவரியில் தேதி நிர்ணயிக்க நீதிபதி முடிவு செய்திருந்தார். ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, மார்ச் 3- ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications