2ஜி வழக்கில் நவம்பர் 10ல் இறுதி வாதம்… 'ஷைனி' சுனாமி அச்சத்தில் திமுக!
டெல்லி: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பரபரப்பு முடிந்து தண்டனையும் வழங்கப்பட்டுவிட்டது. முதல்வராக இருந்த ஜெயலலிதா முன்னாள் முதல்வரானதோடு மட்டுமல்லாது, தனது எம்.எல்.ஏ பதவியையும் இழந்துவிட்டார்.
2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், 1.76 லட்சம் கோடி ரூபாய், அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டதாக, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம், அறிக்கை தாக்கல் செய்தது.இந்த வழக்கை விசாரித்த, சி.பி.ஐ., மத்திய தொலை தொடர்புத்துறை முன்னாள் அமைச்சருமான அ.ராசா, ராஜ்யசபா எம்.பி., கனிமொழி மற்றும் மத்திய அரசின் உயர் அதிகாரிகள், தொலை தொடர்பு நிறுவனங்களின், பல அதிகாரிகளை கைது செய்தது. தற்போது, இவர்கள் ஜாமீனில் வெளி வந்துள்ளனர்.
கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி முதல் 2ஜி வழக்கின் மீதான விசாரணை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நீதிபதி சைனி முன்னிலையில் நடந்து வருகிறது.
இப்போது நீதிபதி ஓ.பி.ஷைனி முன் 2ஜி சம்பந்தமாக இரண்டு வழக்குகள் இருக்கின்றன.
முதல் வழக்கு சி.பி.ஐ தாக்கல் செய்தது. அது, விதிமுறைகள் மீறப்பட்டு வழங்கப்பட்ட உரிமங்களின் காரணமாக அரசுக்கு இழப்பு ஏற்பட்டது என்பது. இந்த வழக்கில் இரண்டு தரப்பு வாதங்களும் முடிந்துவிட்டன. குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும், 824 பக்கங்கள் கொண்ட, வழக்கு தொடர்பான, 1,718 கேள்விகள் அடங்கிய பட்டியலை, சிறப்பு கோர்ட் நீதிபதி ஷைனி முன்பே வழங்கி உள்ளார்.
இந்த வழக்கில், அரசு தரப்பு ஆதாரங்களை பதிவு செய்வது, கடந்த ஆண்டு நவம்பர், 27ம் தேதி துவங்கியது. அதில், இறுதியாக, சி.பி.ஐ. கண்காணிப்பாளர் விவேக் பிரியதர்ஷினி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

153 சி.பி.ஐ தரப்பு சாட்சியங்கள்
இந்த வழக்கில் தொடர்ந்து நடைபெற்ற விசாரணைகளில் சி.பி.ஐ. தரப்பிலான 153 சாட்சிகளின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. அதில், ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் அனில் அம்பானி, அவரது மனைவி டினா அம்பானி, பெரு நிறுவனங்களின் தரகர் நீரா ராடியா, அட்டார்னி ஜெனரல் ஜி.இ. வாஹன்வதி உள்ளிட்டோர் பங்கேற்று அளித்த சாட்சியங்கள் 4,400 பக்கங்களில் பதிவு செய்யப்பட்டன.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் சாட்சியங்கள்
குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆ.ராசா, கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குநர் சரத்குமார் உள்ளிட்ட 29 பேரின் சாட்சியங்களும் பதிவு செய்யப்பட்டன. இதில், எதிர்த்தரப்பு சாட்சியங்களின் பதிவுகள் கடந்த செப்டம்பர் 10ம் தேதியுடன் முடிவடைந்தது.

நவம்பர் 10ல் இறுதி வாதம்
இந்த சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர் நவம்பர் 10-ம் தேதி முதல் இறுதிக்கட்ட வாதம் தொடங்கலாம் என்று நீதிபதி ஷைனி அறிவித்துள்ளார். இதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆ.ராசா, கனிமொழி, சரத்குமார், ஷாகித் பால்வா உள்பட 17 பேர்கள். இவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் தங்கள் வாதங்களை வைப்பார்கள். அதன் பிறகு சி.பி.ஐ தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தை வைப்பார்.

ஜனவரியில் தீர்ப்பு
வாதம் முடிந்ததும் தேதி குறிப்பிடப்படாமல் நீதிமன்றம் ஒத்திவைக்கப்படும் அல்லது தீர்ப்பு தேதி உடனடியாக அறிவிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது என்று டெல்லி சி.பி.ஐ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனவரி 15ம் தேதிக்குள் தீர்ப்பு வந்துவிடும் என்றும் டெல்லி வட்டாரங்களில் பேசிக் கொள்கின்றனர். அதாவது ஜெயலலிதாவுக்கு தீபாவளியையொட்டி தீர்ப்பு வந்தது என்றார் இந்த வழக்கில் பொங்கலை ஒட்டி தீர்ப்பு வரலாம் என்கின்றனர்.

ரூ.200 கோடி கலைஞர் டிவி வழக்கு..
இது தவிர 2ஜி விவகாரத்தில் சி.பி.ஐ நீதிமன்றத்தில் இரண்டாவது வழக்கை அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு உரிமம் பெற்ற ஸ்வான் டெலிகாம் நிறுவனம், அதற்குப் பிரதிபலனாக சில தனியார் நிறுவனங்கள் மூலமாக கலைஞர் டி.விக்கு 200 கோடி ரூபாய் அளித்துள்ளது. இதில், கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. இது தான் அமலாக்கத் துறை குற்றச்சாட்டு.

குற்றப்பத்திரிக்கை தாக்கல்
இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் 25ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவுக்கு தேதி குறித்துவிட்டார் நீதிபதி ஷைனி. முந்தைய சி.பி.ஐ வழக்கில் சாட்சிகளில் ஒருவராக இருந்த தயாளு அம்மாள், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் இருக்கிறார்.
இதிலும் ஆ.ராசா, கனிமொழி, கலைஞர் டி.வி சரத்குமார், கருணாநிதியின் அக்கா மகன் அமிர்தம் உள்ளிட்ட 10 பேர் வருகிறார்கள். அந்த வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவு செய்வது இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ளது. அக்டோபர் 31ம் தேதி சி.பி.ஐ நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு நடக்கும் என்று ஷைனி அறிவித்துள்ளார்.

குற்றச்சாட்டுகள் தயார்
மத்திய அமலாக்கத் துறை சார்பில் சிறப்பு வழக்கறிஞராக ஆனந்த் குரோவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இந்த வழக்கில் எழுத்துப்பூர்வமான ஆதாரங்களைத் தாக்கல் செய்வதற்கான அனுமதியைக் கேட்டார். அதற்கு ஷைனி அனுமதி வழங்கினார். அந்த மனுவில் வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றும் அணுகுண்டு ரகத்தை சேர்ந்தவை என்று இப்போதே திகிலை கிளப்புகின்றனர்.

தயாளு அம்மாள்
இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி தயாளு அம்மாள் ஏற்கெனவே மனுத் தாக்கல் செய்திருந்தார். அதனை, சி.பி.ஐ நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. அதாவது, அவர் விசாரணையை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். 2ஜி வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்ட பிறகு அமலாக்கத்துறை வழக்கு வேகம் பிடிக்கும் எனத் தெரிகிறது.

சைனி சுனாமி
2ஜி வழக்கு விசாரணை அடுத்தடுத்து தொடங்க உள்ளதால் நவம்பர் மாதம் முதல் திமுக தரப்பை ஷைனி சுனாமி தாக்கலாம். இந்த வழக்குக்குப் பிறகு ஏர்செல்- மேக்ஸிஸ் வழக்கு சூடு பிடிக்கும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications