2ஜி வழக்கு: தயாளு அம்மாள் நேரில் ஆஜராக விலக்கு
டெல்லி: 2ஜி வழக்கில் தயாளு அம்மாள் ஆஜராக டெல்லி நீதிமன்றம் விலக்களித்தது. இந்த வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்கக்கோரி தயாளு அம்மாளின் வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.
2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்ற ஸ்வான் டெலிகாம் நிறுவனம், அதற்கு கைமாறாக கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாயை லஞ்சமாக வழங்கியதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது.

சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாக ஆ.ராசா, கனிமொழி, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உள்ளிட்ட 10 பேர் மற்றும் 9 நிறுவனங்கள் மீது குற்றம்சாட்டி அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இது தொடர்பாக இன்றைக்குள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என குற்றப் பத்திரிகையில் இடம் பெற்றவர்களுக்கு, நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக தலைவர் கருணாநிதி மகள் கனிமொழி ஆகியோர் டெல்லி நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்கள்.
உடல்நிலைக்குறைவு காரணமாக கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் ஆஜராகவில்லை. இதனிடையே, நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு அளிக்க கோரி தயாளு அம்மாள் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
தயாளு அம்மாளுக்கு கடந்த 18ம் தேதி சனிக்கிழமை மாலை திடீரென மயக்கமும், சோர்வும் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
80 வயதாகும் தயாளு அம்மாள் வயோதிகம், உடல் நலக் குறைவு காரணமாக அவர் நீண்ட தூரம் பயணிக்க முடியாது என்று ஏற்கனவே மருத்துவர்கள் சான்றிதழ் அளித்துள்ளனர்.
அதன் அடிப்படையில், அவரிடம் சிபிஐ தொடர்ந்த வழக்கின் வாக்குமூலத்தை சென்னையில் பதிவு செய்ய உச்ச நீதிமன்றம் சிபிஐ நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டிருந்தது.
அந்த உத்தரவை மேற்கோள்காட்டி, தயாளு அம்மாள் சார்பில் அவருக்கு அளிக்கப்பட வேண்டிய குற்றப்பத்திரிகை நகலை தன்னிடம் அளிக்க வேண்டும் என வழக்கறிஞர் மூலம் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதையடுத்து தயாளு அம்மாள் ஆஜராக டெல்லி நீதிமன்றம் விலக்களித்தது. இந்த வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்கக்கோரி தயாளு அம்மாளின் வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். தயாளு அம்மாளின் கோரிக்கை குறித்து அமலாக்கத்துறை மே 28ல் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications