2ஜி வழக்கில் செப்டம்பர் 20-ல் தீர்ப்பு தேதி அறிவிப்பு ஒத்திவைப்பு: நீதிபதி ஓ.பி. ஷைனி
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில் இன்று அறிவிக்கப்பட இருந்த தீர்ப்பு தேதி செப்டம்பர் 20-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. ஷைனி தெரிவித்துள்ளார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேட்டில் முறைகேடு நடந்ததால் ரூ1,76,000 கோடி இழப்பீடு அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது என கணக்கு தணிக்கை குழு அறிக்கை குற்றம்சாட்டியது. நாட்டையே பெரும் பரபரப்புக்குள்ளாக்கியது இந்த அறிக்கை.
இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணை கடந்த 6 ஆண்டுகாலமாக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி முன்னிலையில் நடைபெற்று வந்தது.
இவ்வழக்கில் ஏப்ரல் மாதம் இறுதி விசாரணை முடிவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் கடந்த ஜூலையில் ஸ்பெக்ட்ரம் வழக்கில் தீர்ப்பு தேதி இன்று அறிவிக்கப்படும் என நீதிபதி ஓபி ஷைனி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் வழக்கில் தீர்ப்பு தயாராகவில்லை; ஆகையால் செப்டம்பர் 20-ந் தேதி தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என்றார் நீதிபதி ஓபி ஷைனி.