ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: 2-ம் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் இன்று காலை 7 மணிக்கு 2-ம் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது அரசியல் சாசன பிரிவு கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தனி யூனியன் பிரதேசமாக்கப்பட்ட லடாக்கில் அண்மையில் மாவட்ட கவுன்சில் தேர்தல் நடைபெற்றது.
தற்போது ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் 8 கட்டங்களாக நடத்தப்படுகிறது. கடந்த நவம்பர் 28-ந் தேதி முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. அதில் 51,76% வாக்குகள் பதிவாகி இருந்தன.
இன்று காலை 7 மணிக்கு 2-ம் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. வரும் 19-ந் தேதி வரை அடுத்த கட்ட வாக்குப் பதிவுகள் நடைபெறும். அனைத்து வாக்குகளும் டிசம்பர் 22-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
பெரும் எதிர்பார்ப்புடன் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல்.. காலை 7 மணிக்கு தொடங்கியது வாக்கு பதிவு
இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய குப்கர் பிரகடனத்துக்கான மக்கள் கூட்டணி ஆகியவை போட்டியிடுகின்றன. இன்றைய 2-ம் கட்ட வாக்குப் பதிவு 43 தொகுதிகளில் நடைபெறுகிறது. ஜம்மு பிராந்தியத்தில் மட்டும் 18 தொகுதிகளும், காஷ்மீரில் 25 தொகுதிகளும் உள்ளன.
இன்றைய தேர்தல் களத்தில் மொத்தம் 321 பேர் வேட்பாளர்களாக உள்ளனர். இன்று கிராமத் தலைவர்கள் பதவிக்கான தேர்தலும் நடைபெறுகிறது.