விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் கோர்பா-விசாகா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர தீ விபத்து-பாதிப்பு இல்லை!
விசாகப்பட்டினம்: ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த கோர்பா- விசாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி பெட்டிகளில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் நின்ற போது தீ விபத்து ஏற்பட்டதால் யாரும் பாதிக்கப்படவில்லை. தற்போது தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
சத்தீஸ்கர் மாநிலம் கோர்பாவில் இருந்து ஆந்திராவின் விசாகப்பட்டினத்துக்கு கோர்பா- விசாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ் ரயில் (18517 Korba - Visakhapatnam Express ) இயக்கப்படுகிறது. இந்த எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தை வந்தடைந்தது.

விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த கோர்பா எக்ஸ்பிரஸ் ரயிலின் 3 ஏசி பெட்டிகளில் திடீரென தீ பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு சிதறடி ஓடினர்.
இதனையடுத்து உடனடியாக விசாகப்பட்டினம் ரயில் நிலையத்துக்கு தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டனர். 3 ஏசி பெட்டிகளில் மளமளவென பிடித்த தீயை தீயணைப்புத் துறையினர் போராடி அணைத்தனர். கோர்பா- விசாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட போது பயணிகள் யாரும் இல்லாததால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹவுரா- மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் தடம் புரண்டது. இந்த எக்ஸ்பிரஸ் ரயிலின் 18 பெட்டிகள் தடம் புரண்டதில் 2 பேர் பலியாகினர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த நிலையில் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த கோர்பா- விசாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்து தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், கோர்பாவில் இருந்து வந்த விசாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ் ரயில் பராமரிப்பு பணிகளுக்காக பணிமனைக்கு செல்ல நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே போலீசார் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் இருந்து புகை வருவதை பார்த்தனர். இதனையடுத்து உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சுமார் 2 மணிநேரம் போராடி தீயணைக்கப்பட்டது. இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.
விசாகப்பட்டினம் காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ரயில் பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்ட போது பயணிகள் யாரும் பாதிக்கப்படவில்லை. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரயில் பெட்டிகளில் தடயவியல் பிரிவினர் தடயங்களை சேகரித்துள்ளனர். உரிய விசாரணைக்குப் பின்னர் தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது தெரிவிக்கப்படும் என்றனர்.












Click it and Unblock the Notifications