உத்தரப்பிரதேசத்தில் 7 வயது சிறுமி பலாத்காரம்: ஒருவர் கைது
லக்னௌ: உத்தரப்பிரதேசம் மாநிலம் முசாபர்நகரில் நேற்று 7 வயது சிறுமி ஒருவர் மூன்று பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
முசாபர்நகரில் நேற்று அதிகாலையில், காலைக்கடன் கழிக்கச் சென்ற சிறுமியை மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று அருகில் இருந்த மறைவான பகுதிக்கு கடத்திச் சென்று பலாத்காரம் செய்துள்ளது.
சிறுமியைத் தேடிச் சென்ற பெற்றோர் அவரை அருகில் இருந்த விவசாய நிலத்தில் மயங்கிய நிலையில் மீட்டுள்ளனர். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த சிறுமியின் நிலைமை சற்று கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.
சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவான இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
உத்தரப்பிரதேசத்தில் பதான் மாவட்டத்தில் அண்மையில் இரண்டு சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டு மரத்தில் தூக்கில் தொங்கவிடப்பட்ட சம்பவம் ஐ.நா. சபை அளவில் கண்டனத்துக்கு உள்ளானது. எனினும் உத்தரபிரதேசத்தில் பலாத்கார சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்நிலையில், 7 வயது சிறுமி ஒருவர் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.