சரக்கு வேனில் பயங்கரமாக மோதிய ரயில்.. தண்டவாளத்தை கடந்தபோது கோர விபத்து -டிரைவர் உள்பட 3 பேர் பலி
கவுஹாத்தி: அகர்தலா - சில்சார் எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக பயணித்தபோது திடீரென்று குறுக்கே சரக்கு வேன் வந்தது. இதனால் சரக்கு வேன் மீது எக்ஸ்பிரஸ் ரயில் பயங்கரமாக மோதியது. இதில் சரக்கு வேன் டிரைவர் உள்பட 3 பேர் பலியாகி உள்ளனர்.
திரிபுரா மாவட்டம் தலாய் மாவட்டம் அம்பாசா - மனு பிரிவில் ரயில் தண்டவாளத்தை கடக்க பொதுமக்கள் தற்காலிகமாக பாதை ஏற்படுத்தி உள்ளனர். இதனை ரயில்வே நிர்வாகம் அங்கீகரிக்கவில்லை. மேலும் அந்த இடத்தில் ரயில் மோதி விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக ரயில்வேக்கு புகார்கள் சென்றது.

கடந்த அக்டோபர் 5ம் தேதி அகர்தலா ரயில்வே அதிகாரிகள் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தண்டவாளத்தை கடக்க மக்கள் ஏற்படுத்தி இருந்த இடத்தில் தடுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுத்தனர். ஆனால் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த பணி முடங்கியது.
இந்நிலையில் தான் இன்று அகர்தலா - சில்சார் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது சரக்கு வேன் திடீரென்று குறுக்கே வந்தது. இதனால் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு வேன் மீது மோதியது. இதில் சரக்கு வேனில் பயணித்த டிரைவர் உள்பட 3 பேர் பலியாகி உள்ளனர். விசாரணையில் இறந்தவர்களின் பெயர்கள் பிரமேஸ் டெபர்மா (வயது 23), பூபேந்திர டெபர்மா (55), பினா டெபர்மா (27) என்பது தெரியவந்துள்ளது. இது அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி வடகிழக்கு எல்லை ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி கபின்ஜால் கிசோர் சர்மா கூறுகையில், ‛‛அகர்தலா - சில்சார் எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளத்தில் சென்றது. தலாய் மாவட்டம் அம்பாசா - மனு பிரிவில் ரயில் பயணித்தபோது சரக்கு வேன் தண்டவாளத்துக்குள் நுழைந்தது. இதனால் ரயிலின் இன்ஜின் சரக்கு வேனில் மோதி விபத்து ஏற்பட்டது. சரக்கு வேன் டிரைவர் உள்பட 3 பேர் இறந்துள்ளனர். இந்த பகுதியில் மக்கள் அடிக்கடி ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர்.
ரயில் தண்டவாளத்தை கடக்க சட்டவிரோதமாக வழியை மக்கள் ஏற்படுத்தி உள்ளனர். அங்கு தான் விபத்து நடந்துள்ளது. இதுபோன்ற விபத்துகளை தடுக்கும் வகையில் தடுப்புகள் அமைக்க ரயில்வே பலமுறை முயற்சித்தது. ஆனால் அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தான் தற்போது விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து காரணமாக ரயில் சேவை பாதிக்கப்படவில்லை. தொடர்ந்து ரயில் சேவை நடைமுறையில் உள்ளது'' என்றார்.
விபத்து நடந்த இடத்தில் ஏற்கனவே அதிகாரிகள் தடுப்பு ஏற்படுத்த முயன்ற நிலையில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது அந்த இடத்தில் இன்று விபத்து ஏற்பட்டு 3 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் தான் பொதுமக்கள் ரயில்வே தண்டவாளத்தை விட்டு தள்ளியே இருக்க வேண்டும் என்று ரயில்வே அதிகாரிகள் அறிவுரை வழங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications