3 உயிர்கள் பலி.. வக்பு சட்டத்துக்கு எதிரான மே.வங்க போராட்டத்தில் வன்முறை- என்ன நடந்தது முழு விவரம்!
கொல்கத்தா: மேற்கு வங்கம் மாநிலத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ள முர்ஷிதாபாத் மாவட்டம் இப்போது போர்க்களமாகிவிட்டது. மத்திய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வக்பு வாரிய சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தால் 3 அப்பாவிகளின் உயிர்கள் பலியாகி இருக்கின்றன. இதனையடுத்து முர்ஷிதாபாத் மாவட்டத்தில் மத்திய ஆயுதப் படையினரை குவிக்க அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1) மத்திய அரசின் வக்பு வாரிய சட்ட திருத்தத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் மிகப் பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன. இந்த மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வசிக்கின்றனர். இந்த போராட்டத்தால் வன்முறைகளும் வெடித்தன.

2) முர்ஷிதாபாத் வன்முறைகளின் ஒரு பகுதியாக மொத்தம் 3 பேர் படுகொலை செய்யப்பட்டனர். முர்ஷிதாபாத் மாவட்டத்தில் ஒரு வீட்டுக்குள் புகுந்த வன்முறை கும்பல் தந்தை மகன் இருவரையும் கத்தியால் குத்தி படுகொலை செய்தது. அந்த வீட்டையும் சூறையாடி கொள்ளையடித்தது.
3) முர்ஷிதாபாத் மாவட்ட போராட்டங்களின் நடுவே, இளைஞர் ஒருவர் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில் உயிரிழந்து கிடந்தார்.
4) மர்ஷிதாபாத் வன்முறைகள் வெடித்ததால், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, தங்களது மாநிலத்தில் ஒரு போதும் மத்திய அரசின் வக்பு வாரிய சட்ட திருத்தம் அமல்படுத்தப்படாது என அறிவித்தார்.
5) இந்த நிலையில் மே.வங்க எதிர்க்கட்சித் தலைவரான பாஜகவின் சுவேந்து அதிகாரி, முர்ஷிதாபாத் வன்முறைகள் தொடர்பாக அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பொதுமக்கள் பாதிக்கப்படும் போது நீதிமன்றம் கண்களை மூடிக் கொண்டு சும்மா இருக்காது என காட்டமாக தெரிவித்தது.
5) அத்துடன் நிற்காமல், உடனடியாக வன்முறை பாதித்த முர்ஷிதாபாத் மாவட்டத்தில் மத்திய ஆயுதப் படையினர் குவிக்கப்பட்ட வேண்டும் என உத்தரவிட்டது. இதனால் அம்மாவட்டத்தில் மத்திய ஆயுதப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
6) மேலும், முர்ஷிதாபாத் வன்முறை சம்பவம் தொடர்பாக மேற்கு வங்க மாநில அரசு மற்றும் மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசு உடனடியாக பதில் மனுக்களைத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.
7) மேற்கு வங்க வன்முறைகள் தொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மேனன், மேற்கு வங்க மாநிலச் செயலாளர், டிஜிபியுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
8) மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடும் அதிருப்தியையும் தெரிவித்துள்ளது.
8) முர்ஷிதாபாத் மாவட்டத்தில் 300-க்கும் அதிகமான எல்லை பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
9) மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில் மாநிலத்தில் இந்துக்களுக்கு பாதுகாப்பு அளிக்க, முதல்வர் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசு தவறிவிட்டது என மேற்கு வங்க பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான சுகந்தா மஜூம்தார் குற்றம்சாட்டி உள்ளார்.
10) மேற்கு வங்க தேர்தலை முன்வைத்தே, தங்களது அரசியல் செயல் திட்டத்தை நிறைவேற்ற பாஜகதான் மத வன்முறைகளைத் தூண்டுகிறது என திரிணாமுல் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி பதிலடி தந்துள்ளார்.












Click it and Unblock the Notifications