ஆபீஸில் பாலியல் தொல்லை.. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சம்பளத்துடன் 90 நாள் விடுமுறை!
டெல்லி: அலுவலகத்தில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்படும் மத்திய அரசு பெண் ஊழியர்கள், 3 மாத காலத்திற்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை எடுத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மன ரீதியான உளைச்சல்களிலிருந்து மீண்டு வர இந்த விடுமுறை சலுகையை மத்திய அரசு அறிவித்துள்ளது. பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடுப்பு மற்றும் குறை தீர்ப்பு சட்டம் 2013ல் இதுதொடர்பாக திருத்தம் கொண்டு வந்துள்ளது மத்திய அரசு.

இதன் மூலம் பாலியல் தொல்லை தொடர்பாக புகார் பதிவு செய்யும் பெண் ஊழியர்கள் 3 மாத விடுமுறையில் போகலாம். அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும். விசாரணை முடிந்தவுடன் அவர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பலாம்.
இது விசேஷ விடுமுறையாக கணக்கில் வைக்கப்படும் என்றும் பிற விடுமுறையுடன் இணைக்கப்படாது என்றும் மத்திய அரசு விளக்கியுள்ளது.
உடல் ரீதியாக தொடுவது, நெருங்கி வருவது, பாலியல் தேவைகளுக்காக வற்புறுத்துவது, பாலியல் வார்த்தைகளைப் பயன்படுத்தி அத்துமீறி பேசுவது, ஆபாசமாக பேசுவது, ஆபாசப் படம் காட்டுவது, தேவையில்லாமல் அருகே வந்து பேசுவது உள்ளிட்டவை பாலியல் தொந்தரவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications