ஜம்மு காஷ்மீரில் 24 மணிநேரத்திற்குள் 3 பள்ளிகள் தீ வைத்து எரிப்பு
அனந்த்நாக்: ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் அரசு பள்ளிக்கு தீ வைத்தனர். இத்துடன் 3 பள்ளிகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதியான புர்ஹான் வானி கடந்த ஜூலை மாதம் 8ம் தேதி ஜம்மு காஷ்மீரில் கொல்லப்பட்டார். அதில் இருந்தே ஜம்மு காஷ்மீரில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் பிரிவினைவாத அமைப்புகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன. இதனால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மாநிலத்தில் நிலவும் பதட்டத்தை தணிக்க வந்துள்ள பாதுகாப்பு படையினர் பல பள்ளிகளில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் அய்முகமில் சனிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத நபர்கள் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிக்கு தீ வைத்தனர். மேலும் நேற்று மதியம் உயர் நிலைப் பள்ளி தீ பிடித்து எரிந்தது.
இது தவிர அனந்த்நாக் பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கு யாரோ தீ வைத்துள்ளனர். இத்துடன் சேர்த்து 24 மணிநேரத்திற்குள் மூன்று பள்ளிகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.