ஹைதராபாத்தில் பள்ளி லிப்டில் தலை சிக்கி 3 வயது மாணவி பரிதாப பலி
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் 3 வயது மாணவியின் தலை பள்ளியில் உள்ள லிப்டில் சிக்கியதில் அவர் பலியானார்.
ஹைதராபாத் தில்சுக் நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ சைதன்யா பள்ளியில் படித்து வந்தவர் சயீதா ஜெயினப்(3). சயீதா இன்று காலை வழக்கம் போன்று பள்ளிக்கு சென்றுள்ளார். பள்ளியில் தரை தளத்தில் இருந்து மூன்றாவது தளத்திற்கு அவர் லிப்டில் பிற மாணவ, மாணவியருடன் சென்றுள்ளார்.

அப்போது லிப்டின் கதவில் அவரது தலை சிக்கியது. அந்த நேரம் பார்த்து லிப்ட் மேலே செல்லத் துவங்க சயீதா பரிதாபமாக பலியானார். இதை பார்த்த பிற மாணவ, மாணவியர் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே இது பற்றி தகவல் அறிந்த சயீதாவின் பெற்றோர் மற்றும் உள்ளூர் மக்களுக்கு பள்ளிக்கு திரண்டு வந்தனர்.
இந்த விவகாரத்தில் பள்ளிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி அவர்கள் போராட்டம் நடத்தினர்.












Click it and Unblock the Notifications