8 வயது சிறுவனை கழுத்தை அறுத்துக் கோரமாக கொன்ற பாஜக தொண்டர்
திருவனந்தபுரம்: கேரளாவில் 3ம் வகுப்பு சிறுவனின் கழுத்தை அறுத்துக் கொன்ற பாஜக தொண்டரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
கேரளாவில் கசரகாட் மாவட்டம் கன்னன்காட் பகுதியைச் சேர்ந்தவர் அப்பாஸ். இவரது 8 வயது மகன் முகம்மது பயஸ் அருகில் உள்ள பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார்.
வழக்கம் போல தனது நண்பர்கள் மற்றும் சகோதரர்களுடன் நேற்று காலை பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தான் முகம்மது. அப்போது அவர்களைப் பின் தொடர்ந்து வந்த விஜயகுமார் என்ற நபர், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் முகம்மதுவின் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொலை செய்தான்.
மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் நடந்த இந்தக் கொடூர சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. விரைந்து செயல்பட்ட பொதுமக்கள், விஜயகுமாரை மடக்கிப் பிடித்து அருகில் இருந்த மின்கம்பத்தில் கட்டி வைத்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் விஜயகுமாரைக் கைது செய்தனர்.
விஜயகுமார் பாஜக தொண்டர் எனக் கூறப்படுகிறது. விஜயகுமாருக்கும், முகம்மதுவின் தந்தைக்கும் ஏற்பட்ட பகை காரணமாக இந்தக் கொலை நடந்துள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முகம்மதுவின் தந்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார்.
விஜயகுமார் ஏற்கனவே பொய்யான வெடிகுண்டு மிரட்டல் விடுத்த புகாரில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், விஜயகுமார் மனநலம் பாதித்தவர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.