97 வயது கலாம் ரசிகையின் பரம சந்தோஷம்.. 3வது முயற்சியில் கலாமைச் சந்தித்து மகிழ்ந்தார்!
பெங்களூர்: கோவையைச் சேர்ந்த 97 வயது விசாலாட்சி என்ற மூதாட்டிக்கு, அவரது வாழ்க்கை அற்புதமாகவே அமைந்தது. அவர் நினைத்தது எல்லாம நடந்தது. விருப்பங்கள் எல்லாம் நிறைவேறின.. ஒன்றை ஒன்றைத் தவிர. அது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை எப்படியாவது சந்திக்க வேண்டும் என்பது.
2 முறை அதற்கான முயற்சி எடுத்தும் கை கூடவில்லை. இந்த நிலையில் 3வது முயற்சியில் அவரது நீண்ட நாள் கனவு நனவானது. கலாமே நேரில் வந்து அவரைச் சந்தித்து தனது மூத்த ரசிகையின் கனவை நனவாக்கி மகிழ்வித்தார்.
ஜூலை 12ம் தேதி இந்த அருமையான சந்திப்பு நடந்தது. இப்போது பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார் அந்த அழகு மூதாட்டி.
தமிழகத்தின் முதல் பெண் சிஇஓ
விசாலாட்சி அரசுப் பணியில், கல்வித்துறையில் இருந்தவர். இவர் தான் தமிழகத்தின் முதல் பெண் தலைமை கல்வி அதிகாரி என்ற பெருமைக்குரியவர்.
கலாமின் பரம ரசிகை
97 வயதான விசாலாட்சி கலாமின் பரம ரசிகையாவார். அவர் குடியரசுத் தலைவராக இருந்தபோது செயல்பட்ட விதம். குழந்தைகள் மீதும், மாணவர்கள் மீதும், இளைஞர்கள் மீதும் அவர் கொண்டுள்ள நேசம், அவர்களுக்காக அவர் பேசி வரும் விதம் அனைத்துமே விசாலாட்சியைக் கவர்ந்து விட்டன. இதனால் எப்படியாவது கலாமைச் சந்திக்க வேண்டும் என்று உறுதி பூண்டார்.
2 முறை முயற்சித்தும் முடியவில்லை
கலாமை சந்திக்க வேண்டும் என்று 2 முறை முயற்சித்துள்ளார் விசாலாட்சி. ஆனால் அது ஈடேறவில்லை. இந்த நிலையில் 3வது முயற்சியாக அவர் ஜூலை 3ம் தேதி கலாமுக்கு ஒரு இமெயில் அனுப்பினார்.
பேத்தியின் மூலமாக
தனது கொள்ளுப் பேத்தி அர்சித்தா சீனிவாசன் மூலமாக இந்த மெயிலை அனுப்பினார் விசாலாட்சி. அதில், மாபெரும் மனிதரை குடியரசுத் தலைவராக கொண்டிருந்த நாட்டின் குடிமகளாக நான் இருந்துள்ளேன் என்பதில் மட்டற்ற பெருமை அடைகிறேன். அதிலும் நீங்கள் மிகச் சாதாரண நிலையிலிருந்து மாபெரும் உயரத்தைத் தொட்டவர் என்பதை அறிந்து பெருமிதம் கொண்டேன்.
காமராஜர் -பெரியாருடன் பணியாற்றியவர்
நான் மாபெரும் தலைவர்களான காமராஜர், பெரியார் ஆகியோருடன் இணைந்து பணியாற்றும் பெருமை கிடைத்தவர். கல்வித்துறையில் பல முக்கிய மாற்றங்களை நிகழ்த்த ஒரு கருவியாக இருந்தவர். உங்களது பதவிக்காலத்தின்போது நாட்டில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியதை அறிந்தேன். இளைஞர்களிடம் நீங்கள் சென்று சேர்ந்த விதம் அபாரமானது. அவர்களின் மனதில் விழிப்புணர்ச்சித் தீயை ஏற்படுத்தியவர் நீங்கள்.
உங்களை சந்திக்க விரும்புகிறேன்
நீங்கள் இந்த மாதம் கோவைக்கு வருவதாக அறிந்தேன். அந்த சமயத்தி்ல உங்களை சந்திக்க முடிந்தால் மகிழ்ச்சி அடைவேன் என்று கூறியிருந்தார் விசாலாட்சி.
2008 முதலே முயற்சி
2008ம் ஆண்டு முதலே கலாமை சந்திக்க முயன்று வந்தார் விசாலாட்சி. 2008ல் ஒருமுறையும், 2011ல் இன்னொரு முறையும் முயன்றுள்ளனர்.
பேத்தியுடன் சென்று கலாமை சந்தித்த விசாலாட்சி
இந்த நிலையில் ஜூலை 12ம் தேதி கலாமைச் சந்திக்கலாம் என்று விசாலாட்சிக்கு அனுமதி கிடைத்தது. இதையடுத்து தநது பேத்தி டாக்டர் அனு வேலன்டினாவுடன் சர்க்யூட் ஹவுஸுக்குச் சென்றார் விசாலாட்சி. அங்கு கலாமைச் சந்தித்தார்.
அறைக்கு வெளியே வந்து சந்தித்த கலாம்
அப்போது பாட்டியால் சரியாக மூச்சு விட முடியவில்லை. மேலும் கலாம் இருந்த இடம் வரைக்கும் கூட போக முடியாத நிலை. இதை அறிந்த கலாம், அவரது அறையிலிருந்து வெளியே வந்தார். லிப்ட் அருகே வந்து பாட்டியைச் சந்தித்துப் பேசினார். கலாம், பாட்டிக்குக் கை கொடுத்தபோது அவரால் சரியாக மூச்சு விட முடியவில்லை. மகிழ்ச்சியும் கூடச் சேர்ந்திருந்ததால் தடுமாறினார்.
பெரும் சந்தோஷம்
கலாமை சந்தித்தது பாட்டிக்கு பெரும் மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் கொடுத்து விட்டதாக டாக்டர் அனு வேலன்டினா தெரிவித்தார். கலாம் மாபெரும் மனிதர், அவரைச் சந்தித்தது மகிழ்ச்சி என்று விசாலாட்சி பாட்டி பெருமிதத்துடன் கூறியுள்ளார்.