சத்தீஸ்கரில் பயங்கரம்... சி.ஆர்.பி.எப். ஜவான் திடீர் துப்பாக்கிச் சூடு- 4 வீரர்கள் பலி; 3 பேர் படுகாயம்
சுக்மா: சத்தீஸ்கரில் சி.ஆர்.பி.எப். ஜவான் ஒருவர் திடீரென சக வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 4 பேர் கொல்லப்பட்டனர். 3 பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக துப்பாக்கிச் சூடு நடத்திய சி.ஆர்.பி.எப். ஜவான் ரிதீஷ் ரஞ்சன் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் சுக்மா மாவட்டம் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதி. தண்டேவடா பெருவனப் பகுதியை ஒட்டிய மாவட்டம். இங்கு திராவிடர் இன ஆதி பழங்குடிகள் அதிகம் வசிக்கின்றனர்.
ஆந்திரா, தெலுங்கானா, ஒடிஷா மாநில எல்லைகளில் அமைந்துள்ளது சுக்மா மாவட்டம். இதனால் மாவோயிஸ்டுகள் இப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல்களை நடத்திவிட்டு அண்டை மாநிலங்களுக்கு தப்பிச் செல்வது எளிதானதாக இருக்கிறது. இதுவே மாவோயிஸ்டுகளின் கோட்டையாக சுக்மா இருப்பதற்கும் காரணமாக உள்ளது.
துப்பாக்கிச்சூடு நடத்திய சிஆர்பிஎப் மீது என்ன நடவடிக்கை? தேர்தல் ஆணையத்துக்கு திரிணாமுல் கடிதம்!
மாவோயிஸ்டுகள்
நாட்டில் மொத்தம் 83 மாவட்டங்கள் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்டவை ஆகும். இதில் சுக்மா மாவட்டம் மிக முக்கியமான ஒன்றாகும். 2012-ம் ஆண்டு சுக்மா மாவட்ட ஆட்சியராக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பால் மேனனை கடத்திச் சென்று பின்னர் விடுவித்திருந்தனர் மாவோயிஸ்டுகள். இது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
பாதுகாப்பு படை வீரர்கள்
மாவோயிஸ்டுகளை அழித்து ஒழிக்கும் நடவடிக்கையில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், சி.ஆர்.பி.எப். வீரர்கள் முகாமிட்டுள்ளனர். சுக்மா மாவட்டத்தில் மரைகுடா பகுதியில் லிங்கலபள்ளி கிராமத்தில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் முகாமிட்டுள்ளனர். இம்முகாமில் இன்று அதிகாலை 3.45 மணியளவில் திடீரென துப்பாக்கிச் சூடு சப்தம் கேட்டது.
முகாமில் நடந்தது என்ன?
இந்த முகாமில் சி.ஆர்.பி.எப். வீரர் ரிதீஷ் ரஞ்சன் என்பவர் தம்மிடம் இருந்த ஏ.கே. 47 துப்பாக்கியால் சக வீரர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாகிச் சூடு நடத்தினார். இத்துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 7 சி.ஆர்.பி.எப். வீரர்கள் படுகாயமடைந்தனர். இதனையடுத்து படுகாயமடைந்த வீரர்கள் பத்ராசலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
4 வீரர்கள் உயிரிழப்பு
ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 4 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் 2 வீரர்கள், ராய்ப்பூருக்கு சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் மூலம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ரிதீஷ் ரஞ்சன் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.