கட்டுப்பாட்டை மீறி ரயில்வே மேம்பாலத்திலிருந்து கவிழ்ந்த பேருந்து! 4 பேர் பலி.. ராஜஸ்தானில் சோகம்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டத்தில் ரயில்வே மேம்பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதேபோல 28 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தௌசா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகே உள்ள மேம்பாலத்தில் பேருந்து சென்றுக்கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தண்டவாளத்தில் விழுந்துள்ளது. விபத்து அதிகாலையில் நிகழ்ந்ததால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது.

இப்படியொரு விபத்து ஏற்பட்டிருக்கிறது என்பதே விபத்து நடந்து சிறிது நேரத்திற்கு பின்னர்தான் தெரிய வந்ததுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
விபத்து குறித்து தௌசா கூடுதல் ஆட்சியர் ராஜ்குமார் கஸ்வா கூறுகையில், "காயமடைந்தோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல விபத்து குறித்து தீவிரமாக விசாரிக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது" என கூறியுள்ளார்.
இச்சம்பவம் ராஜஸ்தானில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பேருந்து தண்டவாளத்தில் கவிழ்ந்த போது அந்த பக்கமாக எந்த ரயிலும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications