கொரோனா: 18 நாட்கள் வென்டிலேட்டர்.. மரணத்தின் வாசலை தொட்டுவிட்டு வந்த 4 மாதக் குழந்தை டிஸ்சார்ஜ்
விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கிழக்கு கோதாவரி பகுதியைச் சேர்ந்த பழங்குடியின பெண்ணின் குழந்தைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து தீவிர சிகிச்சைக்கு பிறகு அக்குழந்தை தற்போது மீண்டுள்ளது.
கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோயால் குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நோயின் தீவிரத்தன்மை அதிகரித்தால் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும்.
இதனால் வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. இவ்வாறு சிகிச்சை அளிக்கப்படும் போது உடல்நிலையை பொருத்து ஒரு வாரம் முதல் 2 வாரங்களில் குணமடைய முடிகிறது.
கொரோனாவை தடுக்க காசநோய், போலியோ நோய்க்கான தடுப்பூசியை கொடுக்கலாமா?.. விஞ்ஞானிகள் ஆராய்ச்சி
4 மாத குழந்தை
தேவைப்பட்டால் இன்னும் சில நாட்களுக்கு மருத்துவமனையில் இருக்க நேரிடும். இந்த நிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கொரோனா பாதித்த ஒரு 4 மாத குழந்தை, இறக்கும் நிலைக்கு சென்று தற்போது மீண்டுள்ளது. கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண்ணுக்கு கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதியானது.
சிறப்பு கொரோனா வார்டு
இதையடுத்து அவரது 4 மாத குழந்தைக்கு சோதனை செய்ததில் அக்குழந்தைக்கும் கொரோனா பரவியது. இதையடுத்து அந்தக் குழந்தை கடந்த 25-ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் உள்ள மருத்துவமனையில் சிறப்பு கொரோனா வார்ட்டில் அனுமதிக்கப்பட்டது.
டிஸ்சார்ஜ்
குழந்தையின் உடல்நிலை மோசமடைந்ததால் அக்குழந்தைக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. 18 நாட்கள் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்த அந்த குழந்தைக்கு நேற்று கொரோனா சோதனை நடத்தப்பட்டது. அதில் அக்குழந்தைக்கு கொரோனா இல்லை என்பது உறுதியானது.
மகிழ்ச்சி
இதையடுத்து குழந்தை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது. மரணத்தின் வாயிற்கதவுகளை தொட்ட 4 மாத குழந்தை குணமடைந்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாகப்பட்டினத்தில் நேற்று மட்டும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 252 ஆக உயர்ந்துள்ளது. ஒருவர் மரணமடைந்துவிட்டார்.