ஓசியில் ஜூஸ், சாக்லேட் கேட்டு தகராறு.. கடைக்காரரின் புகாரின் பேரில் 4 பெண் போலீஸார் சஸ்பெண்ட்
ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் உள்ள ஜூஸ் கடையில் ஓசியில் சாக்லேட், ஜூஸ், ஆம்லெட் கேட்டு தகராறு செய்ததாக மகளிர் காவல் ஆய்வாளர் உள்பட 4 பெண் போலீஸாரை பணியிடை நீக்கம் செய்தார் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ்.
சென்னை கூடுவாஞ்சேரியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் விஜயலட்சுமி. இவர் அதே காவல் நிலையத்தில் பணிபுரியும் ஜெயமாலா உள்ளிட்ட 4 பேரும் கடந்த 4 ஆம் தேதி படப்பையில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அதே பகுதியில் செயல்பட்டு வரும் ஜூஸ் கடைக்கு 4 பேரும் சென்றனர். அந்த கடையில் இவர்கள் 4 பேரும் ஜூஸ், பிரட் ஆம்லெட், சாக்லேட், தண்ணீர் கேன் ஆகியவற்றை வாங்கினர். அப்போது கடைக்காரர் காசு கேட்ட போது காசு இல்லை ஓசியில் தருமாறு கேட்டனர்.
அதற்கு அந்த கடைக்காரர் கொடுக்க மறுத்துள்ளார். அப்போது அவர்கள் 4 பேரும் தகராறு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கடையை எப்படி நடத்துறேனு பார்ப்பதாக கூறி உரிமத்தை ரத்து செய்வதாக மிரட்டியுள்ளனராம். இது குறித்து கடையின் உரிமையாளர் மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் போலீஸார் அங்கு பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் ஆய்வு செய்தார். அப்போது கடைக்காரர் சொல்வது உண்மை என தெரியவந்தது. இதையடுத்து ஜூஸ் கடையில் தகராறு செய்ததாக விஜயலட்சுமி உள்பட 4 பெண் காவல்களையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இவர்கள் மீது தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள். ஆண் போலீஸார் இதுவரை இது போன்ற தகராறுகளில் ஈடுபட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் பெண் போலீஸாரும் ஓசியில் பொருட்களை கேட்டதாக கூறப்படும் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications