உ.பி.யில் கொடூரம்: தூங்கிக் கொண்டிருந்த 4 வயது தலித் சிறுமி கடத்தி பலாத்காரம்
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் வீட்டிற்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த 4 வயது தலித் சிறுமி கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் ஹாபூர் மாவட்டத்தில் உள்ள கேதா கிராமத்தில் தலித் குடும்பம் ஒன்று நேற்று வீட்டிற்கு வெளியே படுத்து தூங்கியுள்ளது. இரவு 1.30 மணி அளவில் மழை பெய்ததால் அவர்கள் எழுந்து வீட்டிற்குள் சென்றனர்.

அப்போது அந்த குடும்பத்தை சேர்ந்த 4 வயது சிறுமியை காணவில்லை. இதையடுத்து அவர்கள் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது காட்டுப் பகுதியில் சிறுமி நிர்வாணமாக சுயநினைவின்றி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
சிறுமி ஆபத்தான நிலையில் பிலாகாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மீரட் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் சிறுமியின் குடும்பத்தார் மற்றும் கிராமத்தினர் குற்றவாளியை கண்டுபிடிக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குற்றவாளியை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தனர். அதன் பிறகே அவர்கள் மறியலை கைவிட்டுவிட்டு சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளியை கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications