டெல்லியில் பயங்கரம்: பேக்கரி கவுன்ட்டரை கல்லை வைத்து தேய்த்த 4 வயது சிறுவன் அடித்துக் கொலை
டெல்லி: டெல்லியில் உள்ள பேக்கரி கடையில் இனிப்புகள் வைக்கப்பட்டிருக்கும் கண்ணாடி கவுன்ட்டரை கல்லை வைத்து தேய்த்த 4 வயது சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளான்.
டெல்லியில் காய்கறி விற்பனை செய்பவர் ரஹீஸ் அகமது. அவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனது குடும்பத்துடன் கிழக்கு டெல்லியில் உள்ள கீதா காலனியில் குடியேறியுள்ளார். கடந்த புதன்கிழமை அகமதின் மகன் பைசான்(4) வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தான். ஆனால் திடீர் என்று மாயமாகிவிட்டான். இந்நிலையில் கீதா காலனி அருகே ஒரு சாக்குப்பையில் சிறுவன் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பைசான் கடைசியாக ஒரு பேக்கரி அருகில் காணப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் 200 பேரிடம் விசாரணை நடத்தினர். இறுதியில் பேக்கரியின் உரிமையாளர்களான முகமது இலியாஸ் மற்றும் அவரது தம்பி முகமது இக்ரார் ஆகியோரிடம் விசாரித்தபோது அவர்கள் தாங்கள் தான் பைசானை அடித்துக் கொன்றதாக தெரிவித்தனர்.
பேக்கரியில் இனிப்புகள் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி கவுன்ட்டரை கல்லை வைத்து தேய்த்ததால் பைசானை அடித்து நொறுக்கியதாக இலியாஸ் தெரிவித்தார். மேலும் அவரும் இக்ராரும் சேர்ந்து சிறுவன் என்று கூட பார்க்காமல் பைசானை கண்மூடித்தனமாக அடித்துள்ளனர். இதில் தலையில் படுகாயம் அடைந்த சிறுவன் மயங்கி விழுந்துள்ளான். இதையடுத்து இலியாஸ் சிறுவனை தூக்கிச் சென்று அவனுக்கு பாடம் புகட்ட அவனை கடைக்குள் வைத்து பூட்டிவிட்டார்.
கடைக்குள் வைத்து பூட்டப்பட்ட பிறகு பைசான் இறந்துவிட்டான். இதையடுத்து இலியாஸ் தனது தம்பியின் உதவியுடன் சிறுவனின் உடலை சாக்குப்பையில் போட்டுள்ளார். யாருக்கும் தெரியாமல் யார் காரிலாவது உடலை வைக்க திட்டமிட்டு காலை வரை காத்திருந்தனர். ஆனால் அவர்கள் சாக்குப்பையை இழுத்துச் சென்றது அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அவர்கள் அந்த கவுன்ட்டரையும் வேறு ஒருவருக்கு விற்றுவிட்டனர்.












Click it and Unblock the Notifications