சிசிடிவி கேமராக்கள் இல்லை.. 3 மாத தேடுதல் வேட்டை.. கூட்டு பலாத்காரத்தில் 3 பேரை கைது செய்த போலீஸ்
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நடந்து 3 மாதங்கள் ஆன நிலையில் தற்போது நால்வரையும் காவல்துறை கைது செய்திருக்கிறது.
ஏற்கெனவே இம்மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இந்த கைது சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உ.பி காவல்துறை அலட்சியம்.. கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான சிறுமி தற்கொலை
கூட்டு வன்புணர்வு
ஜார்க்கண்ட் மாநிலத்தில் தும்கா பகுதியில் கடந்த ஜூலை 13ம் தேதியன்று இளம்பெண் ஒருவர் தனது சகோதரியின் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது வழியில் நான்கு இளைஞர்கள் இப்பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டுள்ளனர். பின்னர் வாயை பொத்தி அருகில் இருந்த புதருக்கு பின்னால் கொண்டு சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இளம்பெண் கத்தி கூச்சல் போட்டுள்ளார். ஆனால் அது ஆள் அரவமற்ற பகுதி என்பதால் யாருக்கும் கேட்கவில்லை.
விசாரணை
இதனையடுத்து நால்வரும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். காயங்களுடன் வீடு வந்த தனது பெண்ணிடம் விசாரித்த போது நடந்த சம்பவத்தை கேட்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். அடுத்த நாள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ள தொடங்கினர். ஆனால் சம்பவம் நடைபெற்ற பகுதியில் சிசிடிவி கேமராக்கள் ஏதும் இல்லை. அதேபோல குடியிருப்புகளும் அருகில் இல்லை. எனவே குற்றவாளிகளை பிடிப்பதில் காவல்துறையினருக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.
கைது
ஆனாலும் விடாமல் தொடர் விசாரணை மேற்கொண்டதில் இன்று குற்றவாளிகள் நால்வரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இவர்கள் மீது IPC பிரிவு 376-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுவது இது முதல் முறையல்ல. இந்த மாதத்தில் மட்டும் 3 சம்பவங்கள் இது போன்று நடந்துள்ளது. இதில் ஒரு இளம்பெண் உயிரோடு எரிக்கப்பட்டிருக்கிறாள். அதாவது கடந்த 8ம் தேதி ஏற்கெனவே திருமணமான ஒருவர் இளம்பெண்ணிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.
முதல் சம்பவமல்ல
ஆனால் அப்பெண் மறுத்த நிலையில் அவரை அந்த நபர் உயிருடன் எரித்து கொலை செய்துள்ளார். இதேபோல கடந்த 12ம் தேதி படல்லா கிராமத்தில் பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்த இளம்பெண்ணின் உடல் அழுகிய நிலையில் மரத்தில் தொங்கியவாறு மீட்கப்பட்டது. இதில் ஒருவர் கைது செய்யப்பட்டார். இதற்கு முன்னதாக கடந்த 3ம் தேதி இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொன்று மரத்தில் தூக்கில் தொங்கவிடப்பட்டிருந்தார். இப்படியாக தொடர்ந்து அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என அரசியல் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.