குடியரசு தின விழா... டெல்லியில் 40000 போலீஸ் பாதுகாப்பு!
டெல்லி: நாட்டின் 67வது குடியரசு தின விழா கொண்டாட்டத்தையொட்டி அசம்பாவிதங்களைத் தடுக்க 40000 போலீசார் தலைநகர் டெல்லியில் சிறப்புப் பணியிலமர்த்தப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் இதே போல பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நாட்டின் 67-ஆவது குடியரசு தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், குடியரசு தின விழாவை சீர்குலைக்கும் வகையில் சில பகுதிகளில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையொட்டி, தில்லியில் உள்ள பல்வேறு இடங்களில் நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். முப்படை அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ள டெல்லி ராஜபாதை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நகர போலீஸார் மட்டுமின்றி ராணுவத்தினரும், எல்லைப் பாதுகாப்புப் படையினரும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும், பாதுகாப்புக் காரணங்களுக்காக ராஜபாதையை சுற்றி அமைந்துள்ள உயரமான கட்டடங்கள் மூடப்பட்டுவிட்டன. அதுமட்டுமின்றி, தில்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையம், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
பிற மாநிலங்களிலும்
குடியரசு தின விழாவையொட்டி உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரம், கொல்கத்தா, மத்தியப் பிரதேசம், அஸ்ஸாம், பிகார், குஜராத் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறிப்பாக, பயங்கரவாதிகளால் அண்மையில் தாக்குதல் நிகழ்த்தப்பட்ட பதான்கோட் விமானப்படைத் தளம் அமைந்துள்ள பஞ்சாபில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதேபோல், ஹரியாணா, சண்டீகர் உள்ளிட்ட மாநிலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைப் பொருத்தவரை அதன் கோடைக்காலத் தலைநகரமான ஸ்ரீநகரிலும், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளிலும் அதிக அளவிலான ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், பயங்கரவாதிகளின் ஊடுருவலைத் தடுக்கும் வகையில் மாநிலத்தின் எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications