ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களில் 44 பேர் கோடீஸ்வரர்கள்! 23 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவை!
டெல்லி: டெல்லி சட்டசபைத் தேர்தலில் 67 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கவுள்ள ஆம் ஆத்மி கட்சியின் 44 எம்.எல்.ஏ.க்கள் கோடீஸ்வரர்கள்; 23 எம்.எல்.ஏக்கள் மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
தேர்தலில் போட்டியிடுவதற்காக தேர்தல் ஆணையத்தில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் சீர்திருத்த அமைப்பு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற 70 எம்.எல்.ஏ.க்களில் 44 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். முந்தைய தேர்தலில் 51 கோடீஸ்வரர்கள் எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர்.
இவர்களில் 11 பேருக்கு குறைந்தபட்சம் ரூ.6 கோடி முதல் ரூ.10 கோடி வரை சொத்துகள் உள்ளன. ஆர்.கே.புரம் தொகுதி எம்.எல்.ஏ. பிரமிளா தோகஸின் மொத்த சொத்து மதிப்பு ரூ.87,90,98,874. 2013-14 நிதியாண்டில் இவர் ரூ.2,13,46,260 வருமான வரி செலுத்தியுள்ளார்.
இதேபோல, நஜஃப்கர் எம்.எல்.ஏ. கைலாஷ் கெலாட் சொத்து மதிப்பு ரூ.37,45,41,806. இவரும் 2013-14 நிதியாண்டில் ரூ.1,55,62,614 வருமான வரி செலுத்தியுள்ளார்.
சுல்தான்புரா எம்.எல்.ஏ. சந்தீப் குமார், திரிலோக்புரி எம்.எல்.ஏ. ராஜு திங்கான், ஜங்க்புரா எம்.எல்.ஏ. பிரவீண் குமார், ரோஹ்தாஸ் நகர் எம்.எல்.ஏ. சரிதா சிங், மங்கோல்புரி எம்.எல்.ஏ. ராக்கி பிர்லா ஆகியோர் வருமான வரி செலுத்தவில்லை.
இதில், ராக்கி பிர்லா தனது வருமானம் ரூ.18 ஆயிரம் மட்டுமே என்று தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலில் வெற்றி பெற்றுள்ள 70 வேட்பாளர்களில் மொத்தம் 24 பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் ஆம் ஆத்மி கட்சியின் 23 எம்.எல்.ஏ.க்களும் பாஜகவின் ஒரு எம்.எல்.ஏ.வும் அடங்குவர்.
டெல்லி முதல்வராகப் பதவியேற்கவுள்ள அரவிந்த் கேஜ்ரிவால் மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் நான்கு வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மணீஷ் சிசோடியா, சஹி ராம், ஜெக்தீப் சிங், கோபால் ராய், ராம் நிவாஸ் கோயல், ஜர்னைல் சிங், இம்ரான் ஹுசைன், அமானதுல்லா கான், சோம்நாத் பார்தி, பிரகாஷ், பவன் குமார், அகிலேஷ் பதி திரிபாதி, குலாம் சிங், ராஜேஷ் ரிஷி, ஜெர்னைல் சிங், ராக்கி பிர்லா, தினேஷ் மோஹானியா, தேவேந்தர் ஷெராவத், கர்தார் சிங், வந்தனா குமாரி, வேத் பிரகாஷ், சௌரவ் பரத்வாஜ் ஆகியோர் மீது குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன.
பாரதிய ஜனதாவைச் சேர்ந்த விஜேந்தர் குப்தா மீது இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இருப்பினும் இந்த 24 பேர் மீதும் மிகவும் கொடூரமான குற்றங்களாகக் கருதப்படும் கொலை, கொலை முயற்சி போன்ற வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை.
இவ்வாறு தேர்தல் சீர்திருத்த அமைப்பு தெரிவித்துள்ளது.