இந்தியர்களின் இதயத்தோடு இணைந்த இணையம்! தினசரி 6 மணிநேரம் பார்க்கிறார்களாம்!!
டெல்லி: இது இணையதள காலமாகிவிட்டது. விடிய விடிய இணையத்தில் உலாவும் இளசுகள் இருக்கின்றனர். இன்றைக்கு இதயத்தைப் போல இணையத்தை நேசிக்கின்றனர். இணையம் இல்லாவிட்டால் நாங்கள் இல்லை என்று கூறும் இணையதள அடிமைகள் தான் இந்தியாவில் அதிகம் உள்ளனர்.
ஃபேஸ்புக், டிவிட்டர் என சமூக வலைத்தளப்பக்கங்களை பார்ப்பது மட்டுமல்லாது வாங்க, விற்க செய்திகளை பார்க்க, டிவி நிகழ்ச்சிகளை ரசிக்க என அனைத்திற்குமே இணையதளங்களையே நாடுகின்றனர்.
இந்தியாவில் மட்டும் தினமும் சராசரியாக நாள் ஒன்றிற்கு 6 மணி நேரத்தை இணையதளத்தில் செலவிடுகின்றனர் என்று டாடா கம்யூனிகேஷன்ஸ் நடத்திய சர்வதேச கணக்கெடுப்பு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
இணைய தளங்களை பயன்படுத்தும் நாடுகளில் முன்னணியில் உள்ள பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, இந்தியா, அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 9,417 பேர்களிடம் இது குறித்து கணக்கெடுக்கப்பட்டது.

இணையத்தோடு தொடர்பு
இந்தியாவில் 56 சதவீதத்தினர் இணையத் தொடர்பு இல்லாமல் இயங்குவதில்லை என்று கண்டறியப்பட்டு இருக்கிறது.

காணமல் போவோம்
82 சதவீதம் பேர் இணையம் இல்லை என்றால் காணாமல் போனதை போல உணர்வதாக கூறி ஆச்சரியப்படுத்தி உள்ளனர். மேலும், உலக அளவில் ஒப்பிடுகையில் இந்தியாவில் 29% பேர் இணைய தளங்ளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

பெண்கள்தான் அதிகம்
ஆண்களைக் காட்டிலும் 21% பெண்கள், இணையம் இல்லையென்றால் எதையோ இழந்ததைப் போல் உள்ளதாக கூறியுள்ளனர். இந்த உணர்வைப் பெற்ற ஆண்கள் 16% தான்.

பின்னுக்குப் போன டிவி
டேப்லெட், ஸ்மார்ட் போன்களின் வருகை தொலைக்காட்சி பயன்பாட்டை பின்னுக்குத் தள்ளிவிட்டது. அமெரிக்கர்களில் 17% பேரும், இந்தியர்களில் 43% பேரும் நவீன டேப்லெட், ஸ்மார்ட் போன்களின் மூலம் தங்களின் விருப்ப நிகழ்வுகளை பார்த்துக் களிக்கின்றனர்.

மாற்றம் தந்த இணையம்
''இணையம் நமது அன்றாட வாழ்க்கையின் செயல்பாடுகளில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. சமூகப் பொருளாதார அளவில் இணையத்தின் தாக்கத்தை நாம் பெரிய அளவில் காணலாம்'' என்று டாடா கம்யூனிகேஷன்ஸ் தலைமை வர்த்தக மார்க்கெட்டிங் அதிகாரியும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜூலி வூட்ஸ் - மோஸ் கூறியுள்ளார்.

உலக அளவில்
மேலும் இந்த ஆய்வில், தற்போது உலக அளவில் 2.5 பில்லியன் பேர் இணையத்தால் இணைக்கப்பட்டு உள்ளனர். இது உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்குதான். இந்த எண்ணிக்கை வரும் 2020 ஆம் ஆண்டில் 26 பில்லியன் பேராக உயரும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications