3வயது சிறுவனை சித்ரவதை செய்த ஆசிரியை கைது... 5 நாள் போலீஸ் காவலுக்கு அனுமதி
கொல்கத்தா: குறும்பு செய்த 3 வயது சிறுவனை கொடூரமாக அடித்துத் துன்புறுத்திய டியூசன் ஆசிரியரை கொல்கத்தா போலீசார் கைது செய்துள்ளனர். அவரை ஐந்து நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கொல்கத்தா அருகே உள்ள லேக் டவுன் பகுதியைச் சேர்ந்த பெற்றோர், தனது 3 வயது சிறுவனுக்கு டியூசன் சொல்லி கொடுப்பதற்காக பூஜா சிங் என்ற ஆசிரியை ஒருவரை நியமித்திருந்தனர். வீட்டிற்கே வந்து சிறுவனுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த அந்த ஆசிரியர், கடந்த புதன்கிழமை குறும்பு செய்த சிறுவனை எட்டி உதைத்தும், கட்டிலில் தூக்கிப் போட்டும் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தனர். ஆனால், அதற்குள் உஷாரான ஆசிரியர் பூஜாசிங் தலைமறைவானார்.
அவரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் பூஜாசிங்கை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, பூஜாசிங்கை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.