சாட்டை சுழற்றும் சிபிஐ.. கொல்கத்தா டாக்டர் பலாத்கார வழக்கில் 5 மருத்துவர்களுக்கு சம்மன்
கொல்கத்தா: கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக விசாரிக்க 5 மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பி உள்ளது சிபிஐ. இன்று, பலியான பெண் மருத்துவரின் பெற்றோரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. பெண் மருத்துவர் கொலை சம்பவத்தால் மருத்துவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது இச்சம்பவத்தில், நீதி கேட்டு மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்கினர். இந்த கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குள் நேற்று நள்ளிரவு புகுந்த மர்ம நபர்கள், அங்கே இருந்த மருத்துவர்கள் உள்ளிட்ட போராட்டக்காரர்களை தாக்கினர். காவல்துறை வாகனங்களையும் அவர்கள் சேதப்படுத்தினர். பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. நிலைமையைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர்.
கொல்கத்தா காவல்துறை ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நாசவேலையில் ஈடுபட்டதாக சந்தேகித்த சிலரின் புகைப்படங்களை வெளியிட்டு, அவர்களைப் பற்றிய தகவல்களைத் தேடியது. இந்நிலையில், மருத்துவமனைக்குள் புகுந்து சூறையாடியது தொடர்பாக இன்று காலை 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். போராட்டக்காரர்கள் என்ற போர்வையில் 40க்கும் மேற்பட்ட சமூக விரோதிகள் மருத்துவமனையை சூறையாடியதாக கூறப்படுகிறது.
இதனிடையே, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட பயிற்சி மருத்துவரின் உடலில் 150 மி.கி விந்தணு இருப்பது உடற்கூராய்வில் கண்டுபிடிக்கப்பட்டதால், இந்தக் குற்றச் செயலில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டிருக்கலாம் என இறந்த மருத்துவரின் பெற்றோர், நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
பெண் மருத்துவரின் குடும்பத்தை சேர்ந்தவர்களின் வாக்குமூலம் இன்று பதிவு செய்யப்பட்டது. கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து 25 அதிகாரிகள் கொண்ட சிபிஐ குழு, பெண் மருத்துவர் கொலை வழக்கை விசாரித்து வருகிறது. ஏற்கனவை கைது செய்யப்பட்ட சஞ்சய் ராயையும் கஸ்டடியில் எடுத்துள்ளது சிபிஐ.
பெண் மருத்துவர் கொலை தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு 5 மருத்துவர்களுக்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. மருத்துவர்கள் சஞ்சய் வசிஷ்ட், துறை தலைவர் அருணா தத்தா சவுத்ரி, இணை பேராசிரியர் ரினா தாஸ், மோலி பானர்ஜி, அபூர்வ பிஸ்வாஸ் ஆகியோருக்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது.












Click it and Unblock the Notifications