பஞ்சாபில் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு: ரயில் தண்டவாளத்தில் இருந்த 5 வெடிகுண்டுகள் அகற்றம்
குர்தாஸ்பூர்: பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதன்கோட்-அமிர்தசரஸ் ரயில் பாதையில் வைக்கப்பட்ட 5 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளன.
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் தினாநகருக்குள் புகுந்த தீவிரவாதிகள் பேருந்து மற்றும் காவல் நிலையத்தின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இன்று அதிகாலை நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர், 2 போலீசார் பலியாகியுள்ளனர்.
தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் கட்டிடத்தை ராணுவத்தினர் சுற்றிவளைத்துள்ளனர். தீவிரவாதிகள் ராணுவத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் ஒரு வீரர் காயம் அடைந்தார். பதிலுக்கு ராணுவத்தினர் சுட்டதில் தீவிரவாதி ஒருவர் பலியானார்.
இந்நிலையில் தினாநகரில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பதன்கோட்-அமிர்தசரஸ் பகுதியில் பார்மானந்த் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் 5 வெடிகுண்டுகள் வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசார் வெடிகுண்டுகளை கண்டுபிடித்தபோது அந்த வழியாக ரயில் ஒன்று வந்தது. ரயில் குண்டுகள் இருந்த இடத்திற்கு 200 மீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டது. இதன் மூலம் ரயிலை தகர்க்கும் சதி முறியடிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தீவிரவாதிகள் பாகிஸ்தானில் உள்ள நாரோவலில் இருந்து இந்தியாவுக்கு வந்ததாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.