காஷ்மீரில் பள்ளத்தில் கவிழ்ந்த ராணுவ வாகனம்! 5 வீரர்கள் பரிதாபமாக பலி
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் பகுதியில் சுமார் 150 அடி பள்ளத்தில் ராணுவ வீரர்களை ஏற்றி சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்தில் சிக்கியிருக்கிறது. இந்த விபத்தில் 5 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து ராணுவ அதிகாரிகள் கூறுகையில், “மாலை 5.30 மணிக்கு பூஞ்ச் பகுதியில் 6 ராணுவ வாகனங்கள் அணிவகுப்பில் ஈடுபட்டிருந்தன. இதில் ஒரு வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்திருக்கிறது. சம்பவம் நடந்த உடன் மீட்பு பணிகள் வேகமாக தொடங்கப்பட்டன. இதில் 5 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். உயிரிழந்த வீரர்களுக்கு ராணுவம் வீரவணக்கம் செலுத்துகிறது” என்று தெரிவித்துள்ளனர். இந்த விபத்து ராணுவ வீரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் தற்போது குளிர்காலம் உச்சத்தை எட்ட தொடங்கியுள்ளது. தற்போது மைனஸ் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் குறைந்திருக்கிறது. எனவே அங்குள்ள தால் ஏரி உட்பட அனைத்து ஏரிகளும், மற்ற நீர் நிலைகளும் உறைய தொடங்கியுள்ளன. இருப்பதிலேயே சோபியான் மாவட்டத்தில்தான் அதிக அளவில் குளிர் பதிவாகியுள்ளது. இங்கு சுமார் மைனஸ் 8.8 டிகிரி செல்சியஸ் வரை குளிர் நிலவி வருகிறது. இதனால் இரவு நேரங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டிருக்கிறது.
குடிநீர் வரும் பைப்புகளில் நீர் உறைய தொடங்கியதால் விநியோகம் தடைபட்டிருக்கிறது. இரவு வெகு விரைவாக வந்துவிடுவதால் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். மறுபுறம் சாலைகளில் பனி கட்டியாக தேங்கி இருப்பதால் வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த விபத்துக்கும் சாலையில் தேங்கிய பனி கட்டிகள் காரணமாக இருக்குமோ என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. தற்போது விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மட்டுமல்லாது ராணுவ வாகனங்கள் மிகுந்த கவனத்துடன் இயக்கப்பட வேண்டும் என்றும் அறிவுத்தப்பட்டிருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் சுமார் 40 நாட்கள் வரை கடும் பனி காலம் நீடிக்கும். வானிலை ஆய்வு மையத்தின் தற்போதைய அறிவிப்பின்படி, டிச.26 வரை ஜம்மு காஷ்மீரில் வறண்ட வானிலைதான் நிலவும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உறை பனியை பார்க்கவும், இந்த சூழலை அனுபவிக்கவும் கணிசமான அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications