தமிழர்களை தொடர்ந்து குறிவைக்கிறது ஆந்திரா? செம்மரக் கடத்தலில் 5 ஆயிரம் பேருக்கு தொடர்பாம்!!
சித்தூர்: செம்மரக்கடத்தலில் 5 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளதாகவும், அதில் 3 ஆயிரம் நபர்கள் தலைமறைவாக உள்ளதாகவும் ஆந்திராவின் சித்தூர் போலீசார் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் தமிழக எல்லை பகுதியில் உள்ள திருப்பதி வனச்சரகத்தில் லட்சக்கணக்கான செம்மரங்கள் வளர்க்கப்படுகின்றன.
திருப்பதி அருகே உள்ள சேஷாச்சலம் வனப் பகுதியில் மட்டும் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த பகுதியில் சட்டவிரோதமாக செம்மரங்களை வெட்டி கடத்தும் செயல்கள் அதிகரித்து வருகிறது.
சமீபத்தில் திருப்பதி வனப்பகுதியில் செம்மரக்கட்டைகளை கடத்தியதாக கூறி 20 அப்பாவி தமிழர்களை ஆந்திரா போலீசார் சுட்டுக் கொன்றனர்.
ஷேசாச்சலம் வனப்பகுதியில் செம்மரக்கட்டைகளை கடத்துபவர்களை பிடிக்க சித்தூர் மாவட்ட போலீசார் சிறப்பு படைகளை அமைத்துயுள்ளனர். சிறப்பு படை போலீசார் செம்மரக்கட்டைகளை கடத்துபவர்களை தீவிரமாக தேடி வருகிறது.
கடந்த ஜூன் மாதம் முதல் கடந்த மே மாதம் வரை செம்மரம் கடத்தியதாக 390 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. செம்மரக்கட்டைகளை கடத்தியதாக 5 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள்.
கடந்த 31 ஆம் தேதி வரை 2,229 பேர் கைதாகி உள்ளனர். இவர்களில் 1,700 பேர் தமிழ்நாடு மற்றும் பிற தென் மாநிலத்தை சேர்ந்தவர்கள். இதில் பெரும் பாலானவர்கள் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.
இதுவரையில் 120 டன் செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதே போல 313 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் தொடர்புடைய 3 ஆயிரம் பேரை இன்னும் போலீசார் தேடி வருகிறார்கள் என்று சித்தூர் மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர்.