இந்த பையன் உண்மையிலேயே வாலுதாங்க.. ஆனா வெட்டி எடுத்துட்டாங்க
லக்னொ: "எங்க பையன் ரொம்ப வாலுங்க..." என்று பெற்றோர் கூறுவதை கேட்டுள்ளோம். ஆனால் உண்மையிலேயே அவர்கள் சொல்வதைப்போல வால் முளைத்தால் என்ன ஆகும் என்பதற்கு வாழும் உதாரணம், உத்தரபிரசேத மாநிலத்தை சேர்ந்த ஐந்து வயது சிறுவன்தான்.
உத்தரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தை சேர்ந்த ஐந்து வயது சிறுவன் பசந்த்துக்கு இந்த வித்தியாசமான பிரச்சனை இருந்தது. இச்சிறுவன் பிறந்தது முதல் முதுகின் அடிப்பகுதியில் வால் போன்ற பகுதி காணப்பட்டது. சிறுவன் பெரியவனாக ஆரம்பித்தபோது வாலும் சேர்ந்து வளர்ச்சியடைந்தது.

வால் முளைத்தது வெளி உலகத்திற்கு தெரியவந்ததும் பிற சிறுவர்கள் கேலிக்கு பசந்த் ஆளாகியுள்ளான். இதையடுத்து அவனது பெற்றோர் லக்னொவிலுள்ள கேஜிஎம்யூ மருத்துவமனைக்கு பசந்த்தை அழைத்துச் சென்றனர். சிறுவனை ஸ்கேன் செய்து பார்த்த டாக்டர்கள், உடனடியாக அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் பக்கவாதம் ஏற்படும் ஆபத்து உள்ளதாக எச்சரித்தனர்.
இதையடுத்து அறுவை சிகிச்சை செய்து சிறுவனின் வால்பகுதி நீக்கப்பட்டது. இரு வாரங்களுக்கு மருத்துவமனையிலேயே தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அறுவை சிகிச்சை மேற்கொண்ட டாக்டர்கள் கூறுகையில்; முதுகு தண்டுவட எலும்புகளின் குறைபாட்டால் இதுபோன்ற சதைப்பகுதி வளருகிறது. மருத்துவ உலகில் இது 'லிபோமா' என்று அழைக்கப்படும். சதை வளரும்போது தண்டுவடத்துக்கு அழுத்தம் ஏற்படும். இதனால் இடுப்புக்கு கீழுள்ள பகுதி செயலிழந்து பக்கவாதத்தில் விழ வாய்ப்பிருந்தது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததால் சிறுவன் அபாயத்தில் இருந்து தப்பினான் என்றனர்.












Click it and Unblock the Notifications