மாட்டுக் கறி சாப்பிட்டதாக வதந்தி.. 50 வயது முஸ்லீம் நபர் அடித்துக் கொலை.. டெல்லி அருகே பதட்டம்
டெல்லி: டெல்லி அருகே, உ.பி. மாநிலம் தத்ரி என்ற இடத்தில் வீட்டில் மாட்டுக் கறி சாப்பிட்டதாக கூறி 50 வயது முஸ்லீம் நபரை ஒரு கும்பல் அடித்தே கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொல்லப்பட்ட நபரின் பெயர் முகம்மது அக்லாக். இவரையும் இவரது 22 வயது மகனையும் அந்தக் கிராமத்துக் கும்பல் வீட்டை விட்டு வெளியே இழுத்து வந்து சரமாரியாக செங்கற்களால் அடித்துள்ளது. இதில் அக்லாக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகனின் உயிர் ஊசலாடுகிறது. அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் அறிந்து போலீஸார் விரைந்து வந்தபோது போலீஸார் வந்தும் கூட பயப்படாமல் அந்தக் கும்பல் இருவரையும் போட்டு சரமாரியாக அடித்த செயல் அனைவரையும் பதற வைத்துள்ளது.
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அக்லாக் குடும்பத்தினர் கூறுகையில், எங்களது வீட்டில் நாங்கள் மாட்டுக் கறி சாப்பிடவில்லை. வீட்டில் உள்ள ஃபிரிட்ஜில் ஆட்டுக்கறிதான் வைத்திருந்தோம் என்று கூறியுள்ளனர். போலீஸார் அந்தக் கறியை தற்போது தடயவியல் சோதனைக்கு எடுத்துச் சென்றுள்ளனராம்.
கடந்த 35 வருடமாக இந்தக் குடும்பத்தினர் அந்தக் கிராமத்தில் வசித்து வருகின்றனர். இவர்கள் குறித்து வதந்தி பரப்பியது யார் என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக போலீஸாருடன் அந்தத் தாக்குதலில் ஈடுபட்ட வன்முறைக் கும்பல் மோதலில் ஈடுபட்டதால் போலீஸார் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு அவர்களை விரட்டியடித்தனர்.
மாட்டுக் கறி சாப்பிட்டா என்ன தப்பு?
மாட்டுக் கறி சாப்பிடுவதை எந்த சட்டமும் தடுக்கவில்லை. சாப்பிட்டால் குற்றம் என்று எந்த சட்டமும் கூறவில்லை. அப்படி இருக்கையில் ஒரு வதந்தியை நம்பி இப்படிக் கொடூரக் கொலையில் ஒரு கிராமம் ஈடுபட்டிருப்பது அனைவரையும் அதிர வைத்துள்ளது.
அவர்கள் மாட்டுக் கறியே சாப்பிட்டிருந்தால்தான் என்ன.. அது என்ன அவ்வளவு பெரிய குற்றமா? அதை விடக் கொடுமை அவர்களது வீட்டில் வைத்திருந்த கறியை போலீஸார் எடுத்துச் சென்று தடயவியல் சோதனைக்கு அனுப்பியதுதான். போலீஸாரின் இந்த செயல் அந்தக் கிராமத்தினரின் செயலுக்கு சற்றும் சளைத்ததாக இல்லை.












Click it and Unblock the Notifications