4 நிமிடத்தில் 52 முறை "சாரி" கேட்டும் விடல.. திடீரென பள்ளி மாடியில் இருந்து குதித்த 13 வயது மாணவர்
இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் டோங்ரே நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பயிலும் 8ஆம் வகுப்பு மாணவர் ஒருவர், பள்ளி கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். அந்த மாணவர் இப்போது பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எப்போதும் மாணவர்கள் தவறு செய்வது வழக்கம் தான். அந்த வயதில் ஒரு ஆர்வத்தில் எதாவது செய்யப் போய் அது தவறாக முடிந்துவிடும். அதுபோன்ற சூழல்களில் பெற்றோர் அல்லது ஆசிரியர்கள் தான் அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். இருப்பினும், சில நேரம் பள்ளி நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளால் மாணவர்கள் பயந்து போவார்கள்.

என்ன நடந்தது
இதனால் பதற்றத்தில் சில மோசமான முடிவுகளையும் கூட எடுப்பார்கள். அப்படியொரு ஷாக் சம்பவம் தான் மீண்டும் மத்தியப் பிரதேசத்தில் நடந்துள்ளது. அங்கு டோங்கரே என்ற நகரில் படிக்கும் 8ம் வகுப்பு மாணவர், கடந்த வியாழக்கிழமை தனது செல்போனை பள்ளிக்குக் கொண்டு வந்துள்ளார். வகுப்பறையை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இது எப்படியோ பள்ளி நிர்வாகத்திற்குத் தெரிய வந்துவிட்டது. பள்ளிக்கு செல்போனை எடுத்து வருவது விதிமீறல் என்பதால் இது தொடர்பாகப் பேச வெள்ளிக்கிழமை அன்று மாணவனின் பெற்றோரைப் பள்ளி நிர்வாகம் அழைத்தது.
52 முறை சாரி
தேசிய அளவிலான ஸ்கேட்டிங் வீரரான அந்த மாணவர் இதனால் ரொம்பவே பயந்துவிட்டார். பள்ளி முதல்வர் அறையில் அச்சத்திலும் விரக்தியிலும் இருந்த அந்த மாணவர் தொடர்ச்சியாக மன்னிப்பு கேட்டுக் கொண்டே இருந்துள்ளார். கிட்டத்தட்ட நான்கு நிமிடங்களுக்குள் அவர் 52 முறை சாரி, சாரி" என்று கேட்டுக் கொண்டே இருந்துள்ளார். இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
அப்போது அந்த 13 வயது மாணவரிடம் பள்ளி முதல்வர், பள்ளியில் இருந்து சஸ்பெண்ட் செய்துவிடுவேன் என்றும் எதிர்காலமே இல்லாமல் ஆக்கிவிடுவேன் என்றும் அச்சுறுத்தியதாக அந்த மாணவர் கூறுகிறார். தேசிய அளவில் இரண்டு முறை ஸ்கேட்டிங்கில் பதக்கங்கள் வென்ற அந்த மாணவரிடம் பதக்கங்களையும் பிடுங்கிவிடுவேன் எனச் சொல்லி மிரட்டியுள்ளார். இதைக் கேட்டவுடன் அந்த மாணவர் வேதனையின் உச்சத்திற்கே போய்விட்டார்.
ஷாக் சம்பவம்
இதன் பிறகு வெளியே ஓடி சென்ற அந்த மாணவர், மூன்றாவது மாடியில் இருந்து குதித்துள்ளான். இந்தச் சம்பவம் நடந்தபோது, மாணவனின் தந்தை பிரீதம் கட்டாரா பள்ளி வளாகத்தில் தான் இருந்துள்ளார். அவர் பள்ளி நிர்வாகத்தினரைச் சந்திக்க வந்ததாகத் தெரிகிறது. மகன் தற்கொலை செய்ய முயன்றதைப் பார்த்து அந்தத் தந்தை பதறிப் போனார். பிறகு மாணவரை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்
விமர்சனம்
இது தொடர்பாக மாணவனின் தந்தை பிரீதம் கட்டாரா கூறுகையில், "என் மகனைச் சந்திக்கப் பள்ளிக்கு வரச்சொல்லி அழைப்பு வந்தது. பள்ளிக்குச் சென்ற சமயத்தில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இப்போது அவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்" என்றார்.
ஒரு சின்ன விஷயம் அடுத்தடுத்து சில நிமிடங்களில் கைவிட்டுச் சென்றுள்ளது. பள்ளி நிர்வாகம் இந்தச் சம்பவத்தைச் சரியாகத் தான் கையாண்டார்களா என்பது குறித்து இணையத்தில் விவாதம் எழுந்துள்ளது. இது தொடர்பாக போலீசாரும் விசாரணை செய்து வருகிறார்கள்.
தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லை.. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாகச் சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண்e - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.












Click it and Unblock the Notifications