ம.பி.யில் கொடூரம்.. உணவுக்கு பணம் கேட்ட 6 வயது சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற போலீஸ்காரர்
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் வயிறு பசிப்பதாக கூறி உணவுக்கு பணம் கேட்ட 6 வயது சிறுவனின் கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை ஆள்நடமாட்டம் இல்லாத சாலையோரம் போலீஸ்காரர் வீசிய கொடூர சம்பவம் நடந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் தாடியா கோத்வாலி பகுதியை சேர்ந்தவர் மயாங்க் சென் (வயது 6). இவரது தந்தை சலூன் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் மயாங்க் சென் மே மாதம் 4ம் தேதி வெளியே சென்றார். அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
இதுபற்றி அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க துவங்கினர். மாநிலங்களில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் சிறுவனின் போட்டோ அனுப்பி வைக்கப்பட்டது.
அதிர்ச்சி... கொலை வழக்கு ஆதாரங்களை தூக்கி சென்ற குரங்கு... ராஜஸ்தானில் அரங்கேறிய சம்பவம்
கழுத்து நெரித்து கொலை
இந்நிலையில் குவாலியர் ஜான்சி ரோடு பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அங்கு மயாங்க் சென் இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார்? என்பது பற்றி போலீசார் விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் கருப்பு நிற காரில் வந்து உடல் அங்கு வீசப்பட்டது கண்காணிப்பு கேமரா மூலம் தெரியவந்தது.
போலீஸ்காரர் கைது
இதையடுத்து கார் பற்றியும், கொலை செய்த நபர் பற்றியும் போலீசார் விசாரிக்க துவங்கினர். இந்த விசாரணையில் திஹாரா போலீஸ் பயிற்சி பள்ளியில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் ரவி சர்மா கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து விசாரித்தனர். கொலை தொடர்பாக அவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.
கொலை எதற்கு?
இதுபற்றி போலீசார் கூறுகையில், ‛‛மே 4ம் தேதி ரவி சர்மா தாடியாவில் பாதுகாப்பு பணியில் இருந்தார். அங்கு மயாங்க் சென் சென்றார். வயிறு பசிப்பதாக கூறி உணவு வாங்க ரவி சர்மாவிடம் அவர் பணம் கேட்டார். அவர் சிறுவனை அங்கிருந்து அனுப்பி வைத்தார். இருப்பினும் சிறுவன் தொடர்ந்து அவரிடம் பணம் கேட்டு தொல்லை செய்தார். இதனால் கோபமடைந்த அவர் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பிறகு சிறுவன் உடலை கருப்பு நிற காரில் வைத்து ஜான்சி ரோட்டில் உடலை வீசியது தெரியவந்துள்ளது'' என்றார்.
பணி நீக்கம் செய்ய கடிதம்
இதையடுத்து தாடியா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அமன் சிங் ராதோர் கூறுகையில், ‛‛வழக்கு தொடர்பாக ரவி சர்மா கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக அவர் மனஅழுத்தத்தில் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனால் அவர் ஆக்ரோஷமாக நடந்துள்ளார். தற்போது அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என ஏடிஜிபிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது'' என்றார். விரைவில் அவர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பபட உள்ளார்.