கருப்பை வெள்ளையாக்க காரில் பறந்த ரூ.60 லட்சம் பழைய ரூபாய் நோட்டு சிக்கியது.. கர்நாடகாவில் பரபரப்பு
ஹூப்ளி: கர்நாடக மாநிலம் ஹூப்ளி அருகே ரூ.60 லட்சம் பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பழைய ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை தடை விதிப்பதாக பிரதமர் மோடி அறிவித்ததும், கந்துவட்டி உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் மூலம் சேமித்து வைத்திருந்த பலரது பணமும் தேங்கி விட்டது. இதை ரூ.100 நோட்டாக மாற்ற என்ன செய்வது என அவர்கள் அலை பாய்கிறார்கள். அதற்காக பலருக்கு வட்டியில்லாமல் கடன் கொடுப்பது உள்ளிட்ட செயல்களில் இறங்கியுள்ளனர்.

பழக்கம் இல்லாத நபர்களுக்கு கடன் கொடுப்பதும் சிக்கலில் மாட்டிவிடும் என்று நினைப்பவர்கள் கமிஷன் அடிப்படையில் பணத்தை தள்ளிவிட முயன்று வருகிறார்கள்.
எனவே நாடு முழுக்க போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். கர்நாடக மாநிலம் ஹூப்ளி அருகே கார் ஒன்றை போலீசார் வழிமறித்து சோதித்து பார்த்தபோது கட்டுகட்டாக உள்ளே ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரிலிருந்த பிரவீன் ஜெயின் மற்றும் ஸ்ரீநிவாஸ் மூர்த்தி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
ஹூப்ளியில் சிலர் கமிஷன் அடிப்படையில் பணத் தாள்களை மாற்றித்தருவதாக கிடைத்த தகவலின்பேரில் இவர்கள் இருவரும் பணத்தோடு சென்றதாக கூறப்படுகிறது. கைதான இருவரும் பெல்லாரி மாவட்டம் ஹொசப்பேட்டையை சேர்ந்தவர்கள். இந்த பணத்தை பெல்லாரி மாவட்ட கனிம தாது அரசியல்வாதி ஒருவர்தான் கொடுத்தனுப்பியிருக்க வேண்டும் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. கருப்பு பணம் விவகாரத்தில் சுரங்க உரிமையாளர் பெயர் அடிபடுவது கர்நாடக அரசியலில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications