"டோப்" உபயோகிப்பவர்களில் 60 சதவீதம் பேர் “கால்சென்டர்” ஊழியர்களாம்!
தானே: போதைப்பொருட்களை உபயோகிப்பதில் 60 சதவீதம் பேர் கால்சென்டர் ஊழியர்கள்தான் என்று அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்துள்ளனர் மும்பையில் கைதாகியுள்ள போதைப்பொருள் விற்பனையாளர்கள்.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் போதை மருந்து விற்று வந்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கடந்த புதன்கிழமை தானே மாவட்டத்தில் உள்ள மும்புரா நகரில் அல்தாப் ஆருண் என்ற போதை மருந்து வியாபாரியை காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர் அளித்த தகவலை அடுத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறையினர் இன்று சையது சிக்கந்தர் , முகமது ஜாகித் என்ற இரண்டு பேரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 15,000 ரூபாய் மதிப்புள்ள 30 கிராம் எடை கொண்ட மெபெட்ரோன் எனும் போதை மருந்தை பறிமுதல் செய்தனர்.
அவர்களிடம் போதை மருந்து தடுப்பு பிரிவினர் விசாரணை மேற்கொண்ட போது, இருவரும் ஆருணிடமிருந்து போதை மருந்தை வாங்கி விற்றதாக கூறினர்.
மேலும், தானே மாவட்டத்தில் உள்ள பல்வேறு சந்திப்புகள் மற்றும் சதுக்கங்களில் 1 கிராம் பாக்கெட்டுகளாக போதை மருந்து விற்றதாகவும் தங்களது 60 சதவீத வாடிக்கையாளர்கள் கால் சென்டரில் வேலை பார்ப்பவர்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தை அடுத்து தானே மாவட்ட காவல்துறையினர் பள்ளி, கல்லூரி மற்றும் கால்சென்டர்களுக்கு அருகே தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.