பயங்கரம்.. 60 வயது மூதாட்டியை 10 முறை கொடூரமாக சுட்டுக் கொன்ற கும்பல்!
Recommended Video

மீரட்: 60 வயதான மூதாட்டியை 3 பேர் கொண்ட கும்பல் ஈவு இரக்கமே இல்லாமல் கொடூரமாக சுட்டுக் கொன்ற செயல் உத்தரப் பிரதேச மாநிலத்தை அதிர வைத்துள்ளது.
அந்த மூதாட்டியின் மகனையும் அக்கும்பல் சுட்டுக் கொன்று விட்டுத் தப்பியது. இந்த சம்பவத்தைத் தடுக்கத் தவறிய செயலுக்காக 5 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
உ.பியின் மீரட் அருகே உள்ள ஒரு கிராமத்தில்தான் இந்த கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. கட்டிலில் அமர்ந்திருந்த அந்த மூதாட்டியின் முகம், மார்பு, தலையில் வைத்து கொடூரமாக சுட்டுக் கொன்றுள்ளனர் கொலையாளிகள்.

கொலை வழக்கில் முக்கிய சாட்சி
கொலை செய்யப்பட்ட மூதாட்டியின் பெயர் நிச்சேத்தார் கெளர். இவரது மகன் பல்வீந்தர். நிச்சேத்தாரின் கணவர் கடந்த 2016ம் ஆண்டு நிலப் பிரச்சினையில் கொலை செய்யப்பட்டார். அந்தக் கொலையை நேரில் பார்த்த சாட்சிகள் நிச்சேத்தாரும், பல்வீந்தரும்.

உறவினர்களே கொலையாளிகள்
இந்தக் கொலை தொடர்பாக நிச்சேத்தாரின் உறவினர்கள் சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தக் கொலை வழக்கு இன்று கோர்ட்டுக்கு வருகிறது. இதில் இருவரும் சாட்சியம் அளிக்கவிருந்தனர்.

சரமாரியாக சுட்டுக் கொலை
இந்த நிலையில்தான் நேற்று இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டனர். பல்வீந்தர் ஒரு காரில் சுடப்பட்டுப் பிணமாகக் கிடந்தார். மூதாட்டியை 3 பேர் கும்பல் வீட்டில் வைத்து சுட்டுக் கொன்றது.

நெருக்கத்தில் வைத்து சுட்டனர்
தனது வீட்டில் நிச்சேத்தார் கட்டிலில் அமர்ந்திருந்தார். அவருக்கு அருகே இன்னொரு கட்டிலில் இன்னொரு மூதாட்டி அமர்ந்திருந்தார். அப்போது முகத்தில் கர்ச்சீப் கட்டிய நபர் துப்பாக்கியுடன் ஓடி வருகிறார். நிச்சேத்தாரை மிக நெருக்கத்தில் வைத்து சுடுகிறார். மார்பு, முகத்தில் குண்டு பாய்ந்து நிலைகுலைந்து விழுகிறார் நிச்சேத்தார். அப்போது மேலும் 2 பேர் வருகின்றனர். அவர்களும் நிச்சேத்தாரை சுட்டுத் தள்ளுகின்றனர்.

தலையில் வைத்து சுட்ட கொடூரன்
பின்னர் அருகில் இருந்த மூதாட்டியை அங்கிருந்து போகுமாறு ஒருவன் மிரட்டுகிறான். பின்னர் இன்னொரு நபர் சரிந்து விழுந்த நிச்சேத்தாரின் தலையில் துப்பாக்கியை வைத்து சுடுகிறான். மொத்தம் 10 பேர் 3 பேரும் சேர்ந்து சுட்டுத் தள்ளியுள்ளனர். மொத்த சம்பவமும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஒருவனை போலீஸார் கைது செய்துள்ளனர். மூதாட்டியின் பாதுகாப்புக்காக போலீஸார் நிறுத்தப்பட்டிருந்தனர். ஆனால் சம்பவத்தின்போது அவர்கள் அங்கு இல்லை. இதுதொடர்பாக 5 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications