சரத்பவாருக்கு அடிமேல் அடி.. நாகாலாந்து என்சிபி 7 எம்எல்ஏக்கள் கூண்டோடு அஜித் பவார் கோஷ்டிக்கு தாவல்!
கோஹிமா: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நாகாலாந்து மாநிலத்தின் 7 எம்.எல்.ஏக்கள் அக்கட்சியின் அதிருப்தி கோஷ்டி தலைவரான அஜித்பவாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். நாகாலாந்து எம்.எல்.ஏ.க்கள் 7 பேரும் கூண்டோடு அஜித் பவார் கோஷ்டிக்கு தாவி இருப்பது என்சிபி தலைவர் சரத்பவாருக்கு மேலும் நெருக்கடியை அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிராவில் காங்கிரஸ்- உத்தவ் தாக்கரே சிவசேனா கூட்டணியில் இடம்பெற்றுள்ள சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) இரண்டாக உடைந்துள்ளது. என்சிபியின் அஜித்பவார் உள்ளிட்டோர் மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக- ஏக்நாத்ஷிண்டே சிவசேனா கூட்டணி அரசில் இணைந்துள்ளனர். தங்களுக்கு 40 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக அஜித்பவார் அணி தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் சரத்பவாரை தொடர்ந்து அஜித்பவார் கோஷ்டி நேரில் சந்தித்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் சரத்பவார் இதனை ஏற்கவில்லை. அத்துடன் பெங்களூரில் கடந்த 18-ந் தேதி நடைபெற்ற காங்கிரஸை உள்ளடக்கிய அனைத்து எதிர்க்கட்சிகள் கூட்டத்திலும் சரத்பவார் பங்கேற்றார்.
தற்போது சரத்பவாருக்கு மற்றொரு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் என்சிபிக்கு 7 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இந்த 7 எம்.எல்.ஏக்களும் தற்போது அஜித்பவார் தலைமைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். நாகாலாந்தில் ஆளும் பாஜக கூட்டணி அரசுக்கு என்சிபி ஆதரவு தெரிவிக்கிறது. இந்த விவகாரத்தை முன்வைத்துதான் மகாராஷ்டிராவிலும் பாஜக கூட்டணி அரசுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம் என்கிற வாதத்தை முன்வைத்து வருகிறது அஜித்பவார் கோஷ்டி.
நாகாலாந்து மாநிலத்தின் 7எம்.எல்.ஏக்களும் ஒட்டுமொத்தமாக அஜித்பவார் கோஷ்டிக்கு ஆதரவு தெரிவித்திருப்பது சரத்பவாருக்கு பெரும் பின்னடைவு என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications